சாதனையை விட தொடரை வெல்வதே குறிக்கோளாக இருந்தது: விராட் கோலி
ஒருநாள் போட்டிகளில் இலக்கை விரட்டும் போது அதிக சதங்களை (18) எடுத்து சாதனை புரிந்த விராட் கோலி, புள்ளி விவரங்களை விட தொடரை வெல்வதே குறிக்கோளாக இருந்தது என்று கூறியுள்ளார்.
ஒருநாள் தொடரை வென்ற பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
முதலில் தொடரைக் கைப்பற்றுவதிலேயே கவனம் இருந்தது. ஒரு அணியாக முழுநிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ரஹானே தனித்துவமாக ஆடினார். ஷிகர் தவணும் நன்றாக ஆடி வருகிறார். குல்தீப் யாதவ்வும் இந்த்த் தொடரில் அருமையாக வீசினார். பொதுவாக அணியாக திரண்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
இலக்கை விரட்டும் போது மிக சவுகரியமாக இலக்கை எட்டி வெற்றி பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடரை வெல்வதே குறிக்கோளாக இருந்தது. புள்ளிவிவரங்கள் பெரிதல்ல, ஸ்கோர் போர்டைப் பார்த்து ஆடுவது, எந்த பவுலருக்கு மரியாதை அளிக்க வேண்டும், அடித்து ஆட எந்த பவுலரை தேர்வு செய்ய வேண்டும் கூட்டணிகளை உருவாக்குவது எப்படி என்பதில்தான் கவனம் இருந்து வந்தது. மீண்டும் ரஹானே அருமையாக ஆடினார்.
அனைவரும் அளிக்கப்படும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்கின்றனர், தினேஷ் கார்த்திக், பிறகு ஷமி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறார்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.