Breaking News
உலக ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் விதிமுறையை நாங்கள் பின்பற்ற வேண்டியதில்லை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஊக்க மருந்து பயன்படுத்துவதை ஒழிக்கும் வகையில் உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் செயல்பட்டு வருகிறது. போட்டியின் போதும், போட்டி இல்லாத காலங்களிலும் வீரர்களிடம் உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் அந்தந்த நாட்டு தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழக அதிகாரிகள் மூலம் ஊக்க மருந்து சோதனை நடத்தி வருகிறது. ஆனால் ஊக்க மருந்து தடுப்பு சோதனைக்கு உட்பட இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழக தலைவர் நவின் அகர்வாலுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

இந்திய கிரிக்கெட் வாரியம், தேசிய விளையாட்டு பெடரே‌ஷன் கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் நடைபெறும் தேசிய மற்றும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்துக்கு அதிகாரம் கிடையாது. போட்டியின் போதோ அல்லது போட்டி இல்லாத காலத்திலேயோ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும், தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்துடன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே வலுவான ஊக்க மருந்து தடுப்பு முறையை கடைப்பிடித்து வருகிறது. போட்டியின் போதும் போட்டி இல்லாத நேரத்திலும் வீரர்களிடம் ஊக்க மருந்து சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அனுமதியுடன் உலக ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் அங்கீகாரம் பெற்ற சோதனை கூடத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அங்கீகாரம் பெற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. விதிமுறையை பின்பற்றி தான் செயல்பட முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.