Breaking News
ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் புனே அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 11–வது லீக் ஆட்டத்தில் எப்.சி. புனே சிட்டி–மும்பை சிட்டி அணிகள் சந்தித்தன. 15–வது நிமிடத்தில மும்பை வீரர் பல்வந்த் சிங் கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதன் பிறகு பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஆக்ரோ‌ஷம் மற்றும் ஷாட்டுகளை அடிப்பதிலும் புனே அணியே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் முதல் பாதியில் மும்பையின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. 74–வது நிமிடத்தில் மும்பை அணியின் ராஜூ கெய்க்வாட், கோல் பகுதியில் வைத்து புனே வீரர் டியாகா கார்லசை பிடித்து இழுத்ததால் புனேக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை புனே வீரர் எமிலியானோ அல்பாரோ கோலாக மாற்றினார். இதையடுத்து ஆட்டம் ‘டிரா’வை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நிமிடத்தில் (90–வது நிமிடம்) திருப்பம் ஏற்பட்டது. நீண்ட தூரத்தில் இருந்து வந்த பந்தை புனே வீரர் டியாகோ கார்லஸ் அருகில் கொண்டு வந்து, சக வீரர் அல்பாரோவிடம் தட்டிவிட்டார். அவர் அதை எளிதாக கோலாக்கி, அசத்தினார். முடிவில் புனே சிட்டி அணி 2–1 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. 3–வது லீக்கில் ஆடிய மும்பைக்கு இது 2–வது தோல்வியாகும்.

இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.– எப்.சி. கோவா அணிகள் மோதுகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.