Breaking News
மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட வாய்ப்பு

முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’வை தயாரித்தது.இந்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த 28-ம் தேதி தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில் உள்ள கிரிமினல் சட்டப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியது. அப்போது பேசிய ரவிஷங்கர் பிரசாத், பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே இந்த மசோதா. இதில் மதத்திற்கு தொடர்பில்லை என கூறினார். மக்களவையில் இரவு வரை நீடித்த விவாதத்துக்கு பிறகு முத்தலாக் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் தொடர்பான மசோதாவை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்கிறார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பலம் அதிகமாக இருப்பதால், கடும் அமளி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மாநிலங்களவையில் எதிர்ப்பு அதிகமாக இருந்தால் நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனை குழுவுக்கு அனுப்பி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.