Breaking News
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு லக்மல், பிரதீப் இடம்பிடித்தனர்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட லக்மல், பிரதீப் இடம்பிடித்துள்ளனர்.

முத்தரப்பு கிரிக்கெட்

இலங்கையின் 70-வது சுதந்திரதின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் நிதாஹாஸ் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. விராட் கோலி, டோனி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை மறுதினம் கொழும்புக்கு செல்கிறது.

இந்த போட்டிக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் மேத்யூஸ் விலகியதால், டெஸ்ட் கேப்டனான தினேஷ் சன்டிமால் இந்த தொடருக்கும் கேப்டனாக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டுவிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் நுவான் பிரதீப், சுரங்கா லக்மல் அணிக்கு திரும்புகிறார்கள். அதே சமயம் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வன்டர்சே கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். காயத்தில் இருந்து மீளாத குணரத்னே பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

அணி பட்டியல்

இலங்கை அணி விவரம் வருமாறு:-

தினேஷ் சன்டிமால் (கேப்டன்), உபுல் தரங்கா, குணதிலகா, குசல் மென்டிஸ், தசுன் ஷனகா, குசல்பெரேரா, திசரா பெரேரா, ஜீவன் மென்டிஸ், லக்மல், உதனா, அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சா, நுவான் பிரதீப், சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா.

இதற்கிடையே, வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் கை சுன்டு விரலில் ஏற்பட்ட காயத்துக்காக தாய்லாந்துக்கு சென்று சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்கிறார். ஆனாலும் அவர் இந்த தொடரில் ஆடுவதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.