Breaking News
தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு ரஜினிகாந்த் அடையாளம் காட்டவேண்டும் மு.க.ஸ்டாலின்

தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு ரஜினிகாந்த் அடையாளம் காட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:–

நானும் அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையிலும், அது அவருடைய சொந்த குரலா? என்பது ஒரு சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இதன் பின்னணி குரலாக, ஏற்கனவே பா.ஜ.க. சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் இதை சொல்லிக்கொண்டிருக்கிறது.

எனவே, அந்த குரலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும், அவர் சூப்பர் ஸ்டார். அவரே தீவிரவாதிகள் எனக்கு தெரியுமென்று சொல்லியிருக்கின்ற காரணத்தால், அந்த தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு அடையாளம் காட்டினால், நாட்டுக்கு அது நல்லதாக அமையும். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுமட்டுமல்ல வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திர போராட்டமாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டமாக இருந்தாலும் சரி எல்லாமே போராட்டங்கள் நடத்தியே காரியங்கள் சாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.