திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், காமராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டமன்ற சபாநாயகர் தனபால் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். எடப்பாடி அஞ்சலி செலுத்தும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மறைந்த கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அங்கிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
95 வயதான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார். 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருணாநிதி காலமானார். 25ம் தேதி உடல்நலக்குறைவால் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார்.
கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என்று முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என்று தெரிவித்தார். கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது ஏன்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்று விட்டார்.