புதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும்;
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.
அவரது உடல் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. மறைந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் மக்கள் குவிந்து உள்ளனர். அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை வைக்கப்படும் என முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி புதுச்சேரியில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். காரைக்காலில் அமையவுள்ள மேற்கு புறவழி சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என கூறியுள்ளார்.