Breaking News
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி “சாம்பியன்”

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வந்தது. இதில் டாக்காவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோதியது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் அனுஜ் ரவாத் (57 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஸ்வால் (85 ரன், 113 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் அரைசதம் அடித்து சூப்பரான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதன் பின்னர் கேப்டன் சிம்ரன் சிங்கும், அயுஷ் படோனியும் கடைசி கட்டத்தில் வெளுத்து வாங்கினர். சுழற்பந்து வீச்சாளர் துல்ஷானின் ஒரே ஓவரில் படோனி 4 சிக்சர்களை பறக்க விட்டு பிரமாதப்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர் நிபுன் மலிங்காவின் ஓவரில் சிம்ரன் சிங் 3 சிக்சர்கள் விரட்டியடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் அவர்கள் 79 ரன்களை திரட்டினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. கேப்டன் சிம்ரன் சிங் 65 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), படோனி 52 ரன்களுடனும் (28 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 38.4 ஓவர்களில் 160 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மதுஷ்கா பெர்னாண்டோ 49 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் தியாகி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சித்தார்த் தேசாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷ் தியாகி ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 318 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இந்திய அணி தோல்வி பக்கமே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பையை இந்திய ஜூனியர் அணி உச்சிமுகர்வது இது 6-வது முறையாகும். சமீபத்தில் சீனியர் ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணி பட்டத்தை வென்றது நினைவு கூரத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.