ரபேல் விவகாரத்தில் அடிபணிந்த அதிகாரிகளுக்கு பரிசு; எதிர்ப்புக்கு தண்டனை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேச பாதுகாப்புக்காக இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜனதா அதனை மறுக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பு நிர்வாகி ஜெய்பால் ரெட்டி கூறும்பொழுது, ரபேல் போர் விமான ஒப்பந்தம் முதலில் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது. பின் அமைச்சரவை குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்பின்னர் முடிவானது.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வளைந்து கொடுக்காத இணை செயலாளர் அளவிலான அதிகாரி தண்டிக்கப்பட்டார். அந்த பதவிக்கு புதிய அதிகாரி கொண்டு வரப்பட்டார்.
இந்த ஒப்பந்த நடைமுறையை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் ஒழிக்கப்பட்டனர், நசுக்கப்பட்டனர், தண்டிக்கப்பட்டனர், பணி உயர்வு அளிக்கப்பட்டனர். ஒட்டு மொத்த ஒப்பந்த நடைமுறையும் மோசடியானவை என அவர் கூறியுள்ளார்.
சுதந்திர இந்தியா வரலாற்றில் இதுபோன்று நடந்ததே இல்லை. பணிந்து போன அதிகாரிகளுக்கு பின்னர் வெகுமதி வழங்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர் என கூறியுள்ளார்.