Breaking News
நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. பதில் அளிக்க கூடுதல் அவகாசம் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

மத்திய அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களின் மின் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.487 கோடி முறைகேடு நடந்து இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் கண்டறிந்தது.
இதன் அடிப்படையில் சென்னையை சேர்ந்த கடலோர மின்சக்தி நிறுவன நிர்வாகி அகமது ஏ.ஆர்.புகாரி மற்றும் தேசிய மின்சக்தி கழக அதிகாரிகள், உலோகங்கள் மற்றும் கனிம வர்த்தக கழகம், ஆரவல்லி மின்சக்தி கழகம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிறுவனங்கள் தனியாரிடம் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.2,177 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மீதும் ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூடுதலாக இந்த மனுதாரர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கூடுதல் அவகாசம்

கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு சி.பி.ஐ. மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இந்த மனுக்களின் மீது பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு மீண்டும் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர்சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ. மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 3 வாரகால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதே சமயம் தமிழ்நாட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரும் மனுக்கள் மீது இருவாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, சி.பி.ஐ. மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.