Breaking News
24 ஆண்டுக்கு முன்பு நடந்த போலி என்கவுண்ட்டர்: மேஜர் ஜெனரல் உள்பட வீரர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை – ராணுவ கோர்ட்டு தீர்ப்பு

24 ஆண்டுக்கு முன்பு நடந்த போலி என்கவுண்ட்டர் வழக்கில், மேஜர் ஜெனரல் உள்பட வீரர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் 5 பேரை 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவத்தின் பஞ்சாப் ரெஜிமெண்ட் படை வீரர்கள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இவர்கள் 5 பேரும் உல்பா பயங்கரவாதிகள் என்று ராணுவ தரப்பில் கூறப்பட்டது. ஆனால் 5 பேரும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் இது போலியாக நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்தது.

24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ராணுவ கோர்ட்டு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராணுவ மேஜர் ஜெனரல் ஏ.கே.லால், கர்ணல்கள் தாமஸ் மாத்யூ, ஆர்.எஸ்.சிபிரென், படை வீரர்கள் திலீப் சிங், ஜக்தியோ சிங், அபிந்தர் சிங், ஷிவேந்தர் சிங் ஆகியோர் போலி என்கவுண்ட்டரில் ஈடுபட்டது உண்மை என்பதை உறுதி செய்தது. மேலும் இவர்கள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனேவால், அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் தீபங்க குமார்நாத் ஆகியோர் வரவேற்று உள்ளனர். சர்பானந்தா கூறுகையில், “மக்கள் நீதித்துறையின் மீதும், ராணுவத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.