Breaking News
பொங்கலுக்கு அஜித்குமார் படம்

அஜித்குமார் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இது அவருக்கு 59-வது படமாகும். விஸ்வாசம் படப்பிடிப்பை 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியபோது தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரையுலகினர் போராட்டத்தினால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு தள்ளிப்போனது.

இந்த நிலையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் விஸ்வாசம் படம் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் சண்டை காட்சி மட்டுமே பாக்கி உள்ளது.

பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடக்கிறது. இதில் அஜித்குமார், நயன்தாரா பங்கேற்று நடித்து வருகிறார்கள். அதன்பிறகு பின்னி மில்லில் சண்டை காட்சியை படமாக்குகின்றனர். ஓரிரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிகிறது. அதன்பிறகு டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.

விஸ்வாசம் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இதில் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் வருகிறார். அவரது தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். தாதா கதையம்சத்தில் படம் உருவாகிறது. வீரம், வேதாளம் படங்களிலும் தாதாவாகவே நடித்து இருந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.