Breaking News
‘ரிங் மாஸ்டர்’ டெல்லியில் இருக்கிறார்: “அ.தி.மு.க. சர்க்கஸ் கூடாரம்” மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

அ.தி.மு.க. சர்க்கஸ் கூடாரம் என்றும், அதற்கான ‘ரிங் மாஸ்டர்’ டெல்லியில் இருக்கிறார் என்றும் கடுமையாக தாக்கி மு.க.ஸ்டாலின் பேசினார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க. பூதலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர் காந்தி ஆகியோரின் இல்லத் திருமணங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
அண்மையிலே ஒருவர் பேச துவங்கியிருக்கிறார். யார் என்பது உங்களுக்கு தெரியும். மத்திய அரசுக்கு எடுபிடியாக இருக்கக்கூடிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இப்பொழுது அவர் பங்கேற்கக்கூடிய சில அரசு நிகழ்ச்சிகளில் அல்லது அவர்கள் சார்பில் நடைபெறக்கூடிய கட்சி நிகழ்ச்சிகளில், அவர் தி.மு.க.வை விமர்சித்து பேசுகின்ற நேரத்தில் ஒரு கம்பெனி என்று சொல்லத்துவங்கியிருக்கிறார். கம்பெனி என்பதுகூட ஒரு கவுரவம் தான், அதற்கென்று ஷேர்ஹோல்டர்ஸ் எல்லாம் உண்டு, பங்குதாரர்கள் உண்டு, உரிமையாளர்கள் உண்டு, பணியாற்றக் கூடிய தொழிலாளர்கள் உண்டு, ஊழியர்கள் உண்டு.

ஆகவே, கம்பெனியை நம்பி ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. கம்பெனி என்று சொல்லக்கூடியவருடைய நிலை என்னவென்றுகேட்டால், சர்க்கஸ் கூடாரம். சர்க்கஸ் கூடாரத்தினுடைய ‘ரிங் மாஸ்டர்’ யார் என்று கேட்டீர்கள் என்றால், டெல்லியில் இருக்கக்கூடிய மோடி மஸ்தான். நான் மோடியை சொல்லவில்லை, ‘ரிங் மாஸ்டரை’ மோடி மஸ்தான் என்று தான் சொல்லுவார்கள் எப்போதும், அந்த ‘ரிங் மாஸ்டர்’ இன்றைக்கு டெல்லியில் இருக்கிறார்.

அதுவும், சர்க்கஸ் கூடாரத்திலே எடுபிடியாக இருக்கக்கூடிய பழனிசாமி என்ன வேடம் போட்டிருக்கிறார் என்று சொன்னால் கோமாளி வேடம். கோமாளியை பார்த்தீர்கள் என்றால், அப்பப்போ இடையிடையே வந்து சிரிப்பை மூட்டிவிட்டு நகைச்சுவையை தந்துவிட்டு மகிழ்ச்சியை தந்துவிட்டு போய்விடுவார்.

அதுமாதிரி, எடப்பாடி பழனிசாமி அப்பப்போ ஒரு கூட்டத்தில் வந்து நகைச்சுவையோடு ஒரு விசித்திரத்தனமான, வேடிக்கைத்தனமான விபரீதமான நிலையிலே சில செய்திகளை சொல்லிவிட்டு போய்க் கொண்டிருக்கிறார். நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலைமைகளெல்லாம் உங்களுக்குத் தெரியும். அதிலும் குறிப்பாக ஜெயலலிதா மறைந்ததற்கு பின்னால் ஒரு விபத்தின் காரணமாக, ஒரு அதிர்ஷ்டத்தின் காரணமாக யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையிலே எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று அவருடைய தலைமையிலே இன்றைக்கு தமிழ்நாட்டிலே ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இது ஆட்சி என்று சொல்லக்கூடாது, கொள்ளையடிக்கக் கூடிய ஒரு கூடாரமாக, எந்தப் பணிகளாக இருந்தாலும் அது பொதுப்பணித்துறையாக இருந்தாலும் சரி, நெடுஞ்சாலைத் துறையாக இருந்தாலும் சரி, காவல்துறையாக இருந்தாலும் சரி, மீன்வளத் துறையாக இருந்தாலும் சரி, உள்ளாட்சித் துறையாக இருந்தாலும் சரி, மின்சாரத் துறையாக இருந்தாலும் சரி, இன்றைக்கு தமிழகத்திலே இருக்கக்கூடிய எல்லாத் துறைகளிலுமே ஊழல் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

அப்பேற்பட்ட இந்தக் கொள்ளை கூட்டத்தை அகற்ற வேண்டும் என்று சொன்னால் ஒரு காலத்திலே ஆங்கிலேயரை பார்த்து ‘வெள்ளையனே வெளியேறு வெளியேறு’ என்று சொன்னோம். இப்பொழுது என்ன சொல்லவேண்டும் என்றால், ‘கொள்ளையனே இந்த நாட்டை விட்டு வெளியேறு’ என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டுக்கு வந்து இருக்கிறது.

ஏனென்றால், எங்கு பார்த்தலும் கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன், என்ற நிலையிலேயே தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நான் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஏதோ எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் ஆளும் கட்சியின் மீது ஒரு குற்றத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லுகிறோம் என்று நீங்கள் கருதவேண்டிய அவசியமில்லை, நாங்கள் பேசினால் நாங்கள் சொன்னால் அது அரசியல்.

ஆனால், நீதிமன்றமே இன்றைக்கு என்ன சொல்லியிருக்கிறது என்றால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சொல்லப்பட்டிருக்க கூடிய குற்றச்சாட்டிலே நல்ல வகையிலே முகாந்திரம் இருக்கிறது. ஆதாரங்கள் இருக்கிறது. அவருடைய சம்பந்திக்கு காண்டிராக்ட் கொடுத்ததிலே முறைகேடு நடந்திருக்கிறது. குளோபல் டெண்டர் என்று சொல்லக்கூடிய உலக வங்கி டெண்டரினுடைய ஒப்பந்தத்தை எடுத்துப் பார்த்தால், உறவினர்களுக்கு, சொந்தக்காரர்களுக்கு டெண்டர் வழங்கக்கூடாது என்று விதிமுறையிலே வகுத்து தரப்பட்டிருக்கிறது. அதைமீறி, ஏறக்குறைய ரூ.3,120 கோடி ஊழல் புரியக்கூடிய வகையிலே அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, இதை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் முதல்-அமைச்சர் என்பவர் அதிகாரத்திலே இருக்கிறார். பொதுப்பணித்துறையும் அவரிடத்திலே தான் இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறையும் அவரிடத்திலே தான் இருக்கிறது. இதை நாங்கள் விசாரிப்பதைவிட சி.பி.ஐ. விசாரித்தால் தான் நியாயம் கிடைக்கும் என்று கருதி சென்னை ஐகோர்ட்டே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று சொன்னால் இதைவிட ஊழலுக்கு ஆதாரத்தை நாம் தரவேண்டிய அவசியம் இல்லை.

இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்று சொன்னால், இதுவரை தமிழ்நாட்டிலே எத்தனையோ முதல்-அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீதெல்லாம் கூட புகார்கள் வந்திருக்கிறது, ஊழல்கள் வந்திருக்கிறது, குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது. ஆனால், முதல்-அமைச்சர் மீதும் இதுவரை தமிழ்நாட்டிலே சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்ட வரலாறு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கிடைத்திருக்கிறது. இதைவிட அசிங்கம் நம்முடைய தமிழ்நாட்டுக்கு வேறெதுவும் தேவையில்லை.

நாம் விரைவிலே தேர்தலை சந்திக்கவிருக்கிறோம் அது சட்டமன்றத் தேர்தலாக வரப்போகிறதா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முன்பு வரப்போகிறதா அல்லது 2 தேர்தலும் சேர்ந்து வரப்போகிறதோ என்ற ஒரு கேள்விக் குறியோடு காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் நாமெல்லாம் இன்றைக்கு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்த்து வரக்கூடிய நேரத்தை நீங்கள் பயன்படுத்தி நம்முடைய தி.மு.க.வுக்கு நீங்கள் எல்லோரும் சிறப்பான வகையிலே ஆதரவு தந்து மீண்டும் தமிழ் நாட்டிலே கருணாநிதி என்னென்ன திட்டங்கள் தந்திருக்கிறாரோ, இன்னும் என்னென்ன திட்டங்களை தர வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தாரோ அந்த திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து விரைவிலே கிடைத்திட, நீங்கள் எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.