Breaking News
20 ஓவர் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2–வது ஆட்டம் மெல்போர்னில் இன்று நடக்கிறது

20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்று 2–வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
20 ஓவர் கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடர்ச்சியாக ஏழு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ள இந்திய அணி 8–வது முறையாக முத்திரை பதிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
கோலி–ரோகித்

தொடக்க ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் மிடில் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி விட்டனர். ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினாலும், கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தது பின்னடைவாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் அவர்கள் ரன் குவித்து பழைய நிலைக்கு திரும்பும் ஆர்வத்தில் உள்ளனர்.

இதே போல் பீல்டிங்கிலும் கச்சிதமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். முந்தைய ஆட்டத்தில் 2 கேட்ச்சுகளை நமது வீரர்கள் நழுவ விட்டனர். ஆல்–ரவுண்டர் குருணல் பாண்ட்யா 4 ஓவர்களில் 55 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
மேக்ஸ்வெல் அதிரடி தொடருமா?

தொடக்க ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி அதே உத்வேகத்துடன் அடியெடுத்து வைக்கும். கிறிஸ் லின், மேக்ஸ்வெல் சிக்சர் மழை பொழிந்தனர். ஸ்டோனிஸ் ஆல்–ரவுண்டராக ஜொலித்தார். இன்றைய ஆட்டத்திலும் அவர்களைத்தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. மொத்தத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்குமா அல்லது தொடர் ஆஸ்திரேலியா வசம் செல்லுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த மைதானத்தில் இதுவரை 11 இருபது ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 7–ல் வெற்றியும், 4–ல் தோல்வியும் கண்டுள்ளது. இந்திய அணி இங்கு 3 ஆட்டங்களில் ஆடி 2–ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது. 2016–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 184 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.
மழையால் பாதிக்கும்?

மெல்போர்னில் இன்று மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முதலாவது போட்டி போன்று ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், ரிஷாப் பான்ட், குருணல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது அல்லது யுஸ்வேந்திர சாஹல்.

ஆஸ்திரேலியா: டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, பென் மெக்டெர்மோட், ஜாசன் பெரென்டோர்ப், ஆடம் ஜம்பா, பில்லி ஸ்டான்லேக், ஆண்ட்ரூ டை.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.