Breaking News
அனகாபுத்தூரில் ஓட்டல் அதிபரின் மனைவி கழுத்தை அறுத்து கொலை முன்னாள் ஊழியர்கள் 2 பேருக்கு வலைவீச்சு

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் காமராஜர் சாலையில் ஓட்டல் நடத்தி வருபவர் தேவதாஸ். இவரது மனைவி மனோன்மணி என்ற விஜயலட்சுமி (வயது 55). இவர்கள் அதே பகுதியில் பாபு ரெட்டி அவென்யூவில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

தேவதாஸ் நடத்தும் ஓட்டலில் சீனிவாசன், இளையராஜா ஆகிய 2 வாலிபர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்களது நடவடிக்கை சரியில்லாததால் அவர்களை வேலையை விட்டு தேவதாஸ் நிறுத்தி விட்டார்.

மேலும், அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கித்தொகையை நேற்று கணக்கு பார்த்து தருவதாக தேவதாஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு தேவதாஸ் ஓட்டலுக்கு சென்று விட்டார். வீட்டில் விஜயலட்சுமி தனியாக இருந்தார். இரவு 8 மணியளவில் விஜயலட்சுமிக்கு, கடையில் இருந்து டீ எடுத்துக்கொண்டு உறவினர் ஒருவர் சென்றுள்ளார். வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. பலமுறை அழைத்தும் அவர் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர், இதுகுறித்து தேவதாசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே வீட்டிற்கு தேவதாஸ் வந்து பார்த்தார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விஜயலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த 15 பவுன் தங்கநகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது

உடனே இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடையில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் சீனிவாசன், இளையராஜா இருவரும் தலைமறைவாகி விட்டதால், அவர்கள் தான் விஜயலட்சுமியை கொலை செய்து நகையை திருடி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.