Breaking News
தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்? கவாஸ்கர் அதிரடி கேள்வி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

இந்திய வீரர்கள் டோனி, ஷிகர் தவான் ஆகியோரிடம், நீங்கள் ஏன் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதில்லை என்று நாம் கேட்கக்கூடாது. உண்மையில் நாம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், தேர்வு குழுவினரிடமும் தான் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும். தேசிய அணிக்காக விளையாடாத காலக்கட்டங்களில் அவர்களை ஏன் உள்ளூர் கிரிக்கெட்டை தவிர்க்க அனுமதி அளிக்கிறீர்கள்? இந்திய அணி நன்றாக ஆட வேண்டும் என்றால், வீரர்கள் முழுமையான பார்மில் இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருக்க வேண்டியது முக்கியம்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் டோனி ஆடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். கடைசியாக அக்டோரில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அடுத்து ஜனவரியில் தான் ஆடுவார். இது மிகப்பெரிய இடைவெளி. ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடர் மற்றும் அடுத்து வரும் நியூசிலாந்து தொடர்களில் பேட்டிங்கில் ஜொலிக்காமல் போனால், உலக கோப்பை போட்டிக்கான அவரது இடம் கேள்விக்குறியாகி விடும். அதே சமயம் உள்ளூர் கிரிக்கெட்டில் எந்த வடிவிலான போட்டி ஒன்றை தேர்ந்தெடுத்து ஆடினால், அது நீண்ட இன்னிங்சை ஆடுவதற்கு வாய்ப்பாக அமையும். அது மட்டுமின்றி நல்ல பயிற்சியாகவும் இருக்கும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத ஷிகர் தவான் தற்போது குடும்பத்தினருடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.