Breaking News
காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைக்குமார், பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு மஞ்சுளா (வயது 20) என்ற மகளும், 13 வயதில் ஒரு மகனும் இருந்தனர். மஞ்சுளாவும் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

அப்போது அங்கு வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (21) என்பவரை மஞ்சுளா காதலித்தார். 1½ ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை அறிந்த திருமலைக்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 5 மாதங்களுக்கு முன்பு தனது மனைவி வசந்தா, மகள் மஞ்சுளா ஆகிய இருவரையும் சொந்த ஊரான வால்பாறை முடீசுக்கு அனுப்பிவைத்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

காதலனை பிரிந்த மஞ்சுளா செல்போன் மூலம் அவரை தொடர்புகொண்டு பேசி காதலை வளர்த்துவந்தார். கடந்த 5-ந் தேதி மஞ்சுளா பல்லடம் உப்பிலிபாளையத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்தார். மறுநாள் அங்குள்ள தனது காதலன் கார்த்திகேயன் வீட்டுக்கு சென்றார். இவர்களது காதலுக்கு கார்த்திகேயன் வீட்டில் சம்மதம் தெரிவித்துவிட்டதால் அவரை ஏற்றுக்கொண்டனர்.

காதலன் வீட்டில் தங்கியிருந்த மஞ்சுளா நேற்று திடீரென தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து பதறிப்போன கார்த்திகேயன் குடும்பத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மஞ்சுளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மஞ்சுளாவின் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.