Breaking News
உத்தரப்பிரதேசத்தில் 40 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டம், அரசு இயந்திரம் முடங்கும் அபாயம்

‘எஸ்மா சட்டம்’ மிக முக்கியமான துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்வதற்காக பாராளுமன்றத்தால் 1968-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தேவைக்கேற்ப அவசியம் ஏற்படும் பட்சத்தில் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம்.

இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில அரசின் தலைமை செயலாளர் அனுப் சந்திரா பாண்டே திங்கட்கிழமை பிறப்பித்தார். இந்த உத்தரவு அனைத்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தக் கோரி அடுத்த 7 நாட்களுக்கு மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், தாசில்தார்கள் மற்றும் போக்குவரத்து துறை உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போராட்டத்தில் சுமார் 40 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது. உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு இயந்திரம் முடங்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.