Breaking News
டிரம்ப் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் செய்தி சேகரிக்கச்சென்ற பிபிசி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிபிசி ஒளிப்பதிவாளர் ரோன் ஸ்கேன்ஸை நோக்கி சத்தம் போட்ட படி வந்த டிரம்ப் ஆதரவாளர், பிபிசி ஒளிப்பதிவாளர் ரோன் ஸ்கேன்ஸை தாக்கினார்.

இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ரோன் ஸ்கேன்ஸுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிபிசி நிறுவனத்திற்கான அமெரிக்க எடிட்டர் தனது டுவிட்டரில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சண்டர்ஸூக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், “செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஊடகத்தினர் பகுதிக்கு செல்லும் வழியானது கண்காணிப்பின்றி உள்ளது. தாக்குதல் நடந்த பிறகோ, அதற்கு முன்பாகவே, எந்த ஒரு சட்ட அதிகாரிகளும் அங்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பிபிசி வாஷிங்டன் சிறப்பு செய்தியாளர் கேரி ஒ டோனோக் கூறுகையில், செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் தனது ஆதரவாளர்களிடம் தெளிவாக கூற வேண்டும்” என வலியுறுத்தினார். பிபிசி செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டமைப்பும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக செய்தி வெளியிடுவதாக டிரம்ப் பேசிக்கொண்டு இருந்த போது, அவரது ஆதரவாளர் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்படுவதை கண்டதும் தனது பேச்சை நிறுத்திய டிரம்ப், ஊடகத்தினரை நோக்கி, ஒன்றும் பிரச்சினை இல்லையே, எல்லாம் சரியாகத்தானே உள்ளது? என கேள்வி எழுப்பிவிட்டு பின் ஊடகங்களை விமர்சிக்க துவங்கினார். ஊடகங்கள் முற்றிலும் நேர்மையற்றவை எனவும் டிரம்ப் பேச்சின் போது குறிப்பிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.