Breaking News
அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம்: இந்தியருக்கு வாழ்நாள் சிறை

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் தீபக் தேஷ்பாண்டே (வயது 41). இந்திய வம்சாவளி. இவர் 2017–ம் ஆண்டு, ஜூலை மாதம் அங்கு ஆர்லண்டோவை சேர்ந்த ஒரு சிறுமியுடன் இணையதளம் வழியாக தொடர்பு கொண்டார். தான் ஒரு மாடலிங் ஏஜெண்டு என்று அறிமுகம் செய்து கொண்டார். அந்த சிறுமியை, தனது நிர்வாண படத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அந்த சிறுமியும் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

அடுத்து, அதே சிறுமியை வேறு இருவரது பெயரில் தொடர்பு கொண்டு, தனக்கு தொடர்ந்து நிர்வாண படங்களை அனுப்பி வைக்காவிட்டால், ஏற்கனவே பெற்று வைத்துள்ள நிர்வாண படங்களை பரப்பி விடப்போவதாக மிரட்டினார்.

அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் ஆர்லண்டோவுக்கு சென்ற தேஷ்பாண்டே, அங்கு அந்த சிறுமியை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தார். அந்த சிறுமியை ஆபாச படங்கள் எடுத்து தள்ளினார். அத்துடன் அவளை பலாத்காரமும் செய்தார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவர் தனது லீலைகளை தொடர்ந்தார். இதை யாரோ மோப்பம் பிடித்து, அமெரிக்க மத்திய புலனாய்வு படை (எப்.பி.ஐ.) யிடம் போட்டுக்கொடுத்து விட்டனர்.

எப்.பி.ஐ. ஏஜென்டு தன்னை ஒரு சிறுமி என சொல்லி, தேஷ்பாண்டேயுடன் ஆன்லைனில் பழகி, அவர் மீதான புகார் உண்மைதான் என கண்டறிந்து கைது செய்தார்.

இது தொடர்பாக தேஷ்பாண்டே மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக, சிறையில் இருந்து கொண்டே, தான் பலாத்காரம் செய்த சிறுமியை கடத்திக்கொல்வதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அதையும் எப்.பி.ஐ. மோப்பம் பிடித்து முறியடித்தது. இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தன. இப்போது தேஷ்பாண்டே தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்மானித்தது.

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், நிர்வாண படங்கள் எடுத்த குற்றத்துக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் மாவட்ட நீதிபதி கார்லோஸ் மென்டோஜா தீர்ப்பு அளித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.