Breaking News
உள்ளூரில் வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்பில் டெல்லி: டெல்லி கேப்பிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏற்கனவே (8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளி) பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. ஆனால் புள்ளி பட்டியலில் டாப்–2 இடத்திற்குள் வருவதற்கு இந்த ஆட்டத்தின் வெற்றி அதுவும் நல்ல ரன்ரேட்டுடன் பெறுவது மிகவும் முக்கியமாகும். சொந்த ஊரில் நடக்கும் கடைசி ஆட்டம் என்பதால் உள்ளூர் ரசிகர்களுக்கு தித்திப்பான முடிவு அளித்து விடைபெற வேண்டும் என்று டெல்லி அணியினர் விரும்புவார்கள். முந்தைய சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 99 ரன்னில் முடங்கியது. அதனால் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் ஆடுவார்கள். முதுகுவலியால் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா விலகி இருப்பது அந்த அணிக்கு பலத்த பின்னடைவாகும்.

ராஜஸ்தான் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு நூலிழை அளவுக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது. முதலில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது புள்ளி எண்ணிக்கையை 13 ஆக உயர்த்த வேண்டும். அதன் பிறகு ஐதராபாத், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் தங்களது கடைசி லீக்கில் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் ராஜஸ்தானுக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் கிட்டும். கேப்டன் ஸ்டீவன் சுமித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டதால் ராஜஸ்தான் அணி கொஞ்சம் பலவீனமாக காணப்படுகிறது. முந்தைய ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால், பொறுப்பு கேப்டன் ரஹானே, சஞ்சு சாம்சன், ரியான் பராக் உள்ளிட்டோர் ஜொலிப்பதே பொறுத்தே ராஜஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஜெய்ப்பூரில் சந்தித்த ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது நினைவு கூரத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.