Breaking News
உத்தரபிரதேசத்தில் இருந்து ரெயிலில் திரும்பிய போது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் வெயிலுக்கு பலி – உருக்கமான தகவல்கள்

தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கடும் வெயில் காரணமாக பரிதாபமாக இறந்த இந்த சம்பவம் குறித்த உருக்கமான தகவல்கள் வருமாறு:-

கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட தமிழகத்தில் இருந்து 68 பேர் வடமாநிலங்களுக்கு 3-ந் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். அவர்கள், கயா, திருவேணி சங்கமம், காசி, ஆக்ரா, வாரணாசி ஆகிய பகுதிகளில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் முதியவர்கள் ஆவார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. அங்கு நேற்று முன்தினம் 118 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் முதியவர்கள் வெயிலின் கொடுமையில் சிக்கி பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள், கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கோவைக்கு புறப்பட்டனர். ஜான்சி அருகே ரெயில் வந்தபோது, கடும் வெப்பத்தினால் முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் 2 பெண்கள், 3 முதியவர்களும் ரெயில் பெட்டிக்குள் மயங்கி சுருண்டு விழுந்தனர்.

உடனே ரெயில் நிறுத்தப்பட்டு அவர்களை உடனடியாக ஜான்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரி சோதனை செய்த டாக்டர்கள் 5 பேரும் இறந்ததை உறுதி செய்தனர்.

இறந்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:

சுப்பையா (வயது 88), பாலகிருஷ்ணன் (68) இவர்கள் இருவரும் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள். தெய்வானை (70), பச்சைய கவுண்டர் (80), கலாதேவி (58) இவர்கள் கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர்கள்.

சுப்பையா, ஓய்வுபெற்ற தாசில்தார். இவருடைய உறவினர் பாலகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இறந்த 5 பேரின் உடல்கள் ஜான்சியில் இருந்து கோவைக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜான்சி ரெயில்வே கோட்ட மேலாளர் நீரஜ் அம்பிஸ்ட் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கடும் வெயில் காரணமாக சுற்றுலா சென்ற 5 பேர் இறந்த சம்பவம் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்கள் தொடர்பான தகவல்களை பெற 138 என்ற ரெயில்வே உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதியவர்களை வடமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்பவர்கள் வெயில், குளிர் தொடர்பான பருவநிலைகள் குறித்து தகவல்களை அறிந்து அழைத்து செல்ல வேண்டும் என்றும், பலியானவர்களின் குடும்பத்துக்கு உத்தரபிரதேசம், தமிழ்நாடு மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பலியானவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.