Breaking News
பந்து தாக்கி விரலில் காயம்: ஷிகர் தவான் அடுத்த 2 ஆட்டத்தில் விளையாடமாட்டார் – இந்திய அணிக்கு பின்னடைவு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து தாக்கியதில் கைவிரலில் காயம் அடைந்த இந்திய வீரர் ஷிகர் தவான் அடுத்த 2 ஆட்டத்தில் விளையாடமாட்டார். இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 109 பந்துகளில் 16 பவுண்டரியுடன் 117 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து இடக்கை பேட்ஸ்மேனான ஷிகர் தவானின் இடது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் வலியால் துடித்த தவான் சிகிச்சை பெற்று தொடர்ந்து விளையாடினார். ஆனால் அவர் பீல்டிங் செய்ய களம் இறங்கவில்லை.

இந்த நிலையில் காயம் அடைந்த ஷிகர் தவானுக்கு ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு இடது கை பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் அடுத்த 2 லீக் ஆட்டத்தில் (நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக) நிச்சயம் விளையாட முடியாது. தவானுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை மற்றும் காயத்தில் இருந்து அவர் மீண்டு வர எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் அவருடைய மருத்துவ அறிக்கையை காட்டி ஆலோசனை பெற இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் பர்ஹர்ட் சிறப்பு நிபுணர்களிடம் கருத்து கேட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். டாக்டர்களின் அறிக்கையின் அடிப்படையிலேயே தவான் உலக கோப்பை போட்டியில் தொடர முடியுமா? அல்லது உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறுவாரா? என்பது முடிவாகும்.

தவான் காயம் விவகாரத்தில் நிதானமாக ஆராய்ந்து முடிவு எடுக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏனெனில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டால், தவான் காயம் விரைவில் குணம் அடைந்தாலும் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாது. அணியில் உள்ள மற்ற எந்தவொரு வீரராவது காயம் அடைந்து வெளியேறினால் தான் தவானை அணியில் மீண்டும் சேர்க்க போட்டியின் டெக்னிக்கல் கமிட்டி அனுமதி அளிக்கும் என்பது விதிமுறையாகும். தற்போது அவரது காயம் குணமடைய 2 வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் அவர் உலக கோப்பை போட்டியில் முழுமையாக ஆடுவாரா என்பதில் சந்தேகமே நீடிக்கிறது.

ஒருவேளை தவானின் காயம் விரைவில் குணம் அடையாமல் போனால் ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் (நாளை) தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன், லோகேஷ் ராகுல் களம் இறங்குவார் என்று தெரிகிறது. மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

33 வயதான ஷிகர் தவான் ஐ.சி.சி.யால் நடத்தப்படும் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இதுவரை 20 ஆட்டத்தில் ஆடி 1,238 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதமும் அடங்கும். அவர் காயத்தில் சிக்கி இருப்பது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.