Breaking News
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. இதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அனேக இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு.

அதிகபட்ச மழை

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திருவள்ளூரில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, செம்பரம்பாக்கம், திருவலங்காடு, பூந்தமல்லி மற்றும் சோழவரத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவலா, காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் தர்மபுரியில் 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.