Breaking News
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா கடைசி 20 ஓவர் போட்டி – புனேயில் இன்று நடக்கிறது

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. கவுகாத்தியில் நடக்க இருந்த முதலாவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்றிரவு நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

2-வது ஆட்டத்தில் இலங்கையை 142 ரன்னில் கட்டுப்படுத்திய இந்திய அணி அந்த இலக்கை எளிதில் எட்டிப்பிடித்தது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி மிரட்டிய நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 52 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் பும்ரா, இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 20 ஓவர் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார். பேட்டிங்கை பொறுத்தவரை ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் விராட் கோலி அனைவரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணி பரிசோதனை முயற்சியாக இன்றைய ஆட்டத்தில் மனிஷ் பாண்டே அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். மற்றபடி வலுவான நிலையில் காணப்படும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி, தொடரை கைப்பற்றுவதில் தீவிர முனைப்புடன் உள்ளது.

போதிய அனுபவம் இல்லாத இலங்கை அணி இந்தூர் ஆட்டத்தில் தகிடுதத்தம் போட்டது. அதுவும் ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பினர். கேப்டன் மலிங்கா 4 ஓவர்களில் 41 ரன்களை வாரி வழங்கினார். ஆல்-ரவுண்டர் உதனா காயத்தால் விலகி இருப்பது அவர்களுக்கு மற்றொரு பின்னடைவாகும். ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே அவர்களால் இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியும். கடந்த ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் இந்த ஆட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளது.

இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில்,‘ மிகவும் திறமையான வீரர்கள் எங்களது அணியில் உள்ளனர். அவர்களுக்கு ஆட்டத்தின் போக்கு, வியூகம், சூழலை சமாளிப்பது ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டி உள்ளது. எப்போது ரிஸ்க் எடுத்து ஆடுவது, எப்போது நிதானம் காட்டுவது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் தடுமாற்றமின்றி தொடர்ந்து ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.

புனே மைதானத்தில் இதுவரை இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2012-ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து இருந்தது. 2016-ம் ஆண்டு நடந்த மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி இந்தியாவை 101 ரன்னில் சுருட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே அல்லது மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர்.

இலங்கை: குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா, பானுகா ராஜபக்க்ஷே, ஒஷாடா பெர்னாண்டோ, மேத்யூஸ், ஷனகா, தனஞ்ஜெயா டி சில்வா, வானிந்து ஹசரங்கா, மலிங்கா (கேப்டன்), லாஹிரு குமாரா.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.