Breaking News
ஈரான் ஏவுகணை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் காயம்: அமெரிக்கா தகவல்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இதனால் ஈரானை தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இருநாடுகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்தது. ஈரான் அண்டை நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பதிலடியாக அமெரிக்கா ஈரான் நாட்டின் ராணுவ தளபதி சென்ற கார் மீது குண்டுகளை வீசியது. இதில் ராணுவ தளபதி காசிம் சுலைமானி உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு ஈரான் மட்டும் இன்றி, ஈராக்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்க படைகள் உடனடியாக ஈராக் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஈரான் நாட்டின் புதிய தளபதியாக பொறுப்பேற்ற இஸ்மாயில் கானி, “சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம்” என்று சூளுரைத்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி ஈராக்கில் எர்பில் மற்றும் அல்-ஆசாத் விமானப்படை தளம் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மறுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

“ஈரான் தாக்குதலில் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை. ஆனால் மூளை அதிர்ச்சி போன்ற சில குறைபாடுகளுக்காக வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான வீரர்கள் அங்குள்ள பதுங்கு குழிக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இதனாலேயே உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

அந்த ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் 11 வீரர்கள் காயமடைந்தனர். ஆனால் பெரும்பாலான ராணுவ தளவாட பொருட்கள் சேதமடைந்தன. காயமடைந்த வீரர்களில் 8 பேர் ஜெர்மனியிலும், 3 பேர் குவைத்தில் உள்ள ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.