Breaking News
“ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தை இழிவுபடுத்துகின்றனர்” – மேகனின் தந்தை குற்றச்சாட்டு

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கேல் இருவரும் தங்களது அரச பதவிகளை துறந்து, இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்தனர்.

ஹாரி-மேகன் தம்பதியின் இந்த முடிவு, உலகளவில் விவாதத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. ஹாரியும், மேகனும் புதிய வாழ்க்கையை தொடங்கும் விருப்பத்துக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாக ராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, “இளவரசர் ஹாரியும், மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுகின்றனர். அரச பட்டங்களையும் துறக்கின்றனர்” என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் மேகன் மார்கேலின் தந்தை தாமஸ் மார்கேல், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தை இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டினார்.

“இங்கிலாந்து அரச குடும்பம் பெரும் பாரம்பரியத்தை கொண்டது ஆகும். ஹாரியும் மேகனும் அதன் மதிப்பை குறைத்து அதனை இழிவுபடுத்துகின்றனர். அவர்கள் இதை செய்திருக்கக் கூடாது.

அவர்கள் திருமணத்தின் போது அரச குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்து செயல்படுவோம் என்று இருவரும் உறுதிமொழி ஏற்றனர். தற்போது தங்களது கடமையில் இருந்து இருவரும் விலகிச் செல்கின்றனர்.

இளவரசி ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவாகவும் இருக்கும். மேகன் மார்கேல் வாழ்க்கையில் அந்த கனவு நிஜமானது. ஆனால் அதை அவர் உதறித் தள்ளிவிட்டார்.

பணத்திற்காக மேகன் இவ்வாறு செய்வதாக எனக்கு தோன்றுகிறது. அவர்கள் இருவரும் எதை எதிர்பார்த்து இந்த முடிவை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.