Breaking News
கற்பனையாக கூறவில்லை; நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்

சென்னையில் சமீபத்தில் ‘துக்ளக்’ பத்திரிகையின் 50-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

ரஜினிகாந்த் சர்ச்சை பேச்சு

அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, ராமர் மற்றும் சீதையின் உருவப்படங்கள் நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாகவும், செருப்பால் அடிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்தை தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திராவிடர் கழகமும், பெரியார் பெயரிலான பல்வேறு இயக்கங்களும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ரஜினிகாந்த் மீது போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கற்பனையாக கூறவில்லை

அந்த போராட்டம் நடைபெறுவதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘துக்ளக்’ பத்திரிகை 50-வது ஆண்டு விழாவில் நான் பேசிய ஒரு விஷயம் சர்ச்சையாக இருந்து வருகிறது. 1971-ம் ஆண்டு நான் கூறியதுபோல் எந்த விஷயமும் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். 2017-ம் ஆண்டு இந்து குழுமத்தின் ‘அவுட்லுக்’ பத்திரிகையில், 1971-ம் ஆண்டு நடந்த ஊர்வலத்தில் ராமன் – சீதை உருவபொம்மைகளுக்கு உடையில்லாமல் செருப்பு மாலை அணிந்து எடுத்து வந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இல்லாத விஷயம் ஒன்றை நான் சொல்லவில்லை. கற்பனையாக எதையும் நான் கூறவில்லை. மற்றவர்கள் கூறியதை, இதில் வந்ததைத்தான் (பத்திரிகையை காட்டுகிறார்) நான் சொன்னேன். அங்கு வந்து தர்ணா செய்த லட்சுமணனும் அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார். நான் இல்லாத ஒன்றை கூறியதாக சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. நான் இல்லாத ஒன்றையும் சொல்லவில்லை. நான் கேள்விப்பட்டது, இதுபோன்ற இதழ்களில் வந்ததைத்தான் சொல்லியிருக்கிறேன்.

மன்னிப்பு கேட்க முடியாது

நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதில்களும் வருமாறு:-

தடுக்கும் முயற்சியா?

கேள்வி:- உங்கள் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது உங்கள் அரசியல் வருகையை தடுக்க நடத்தப்படுவதாக கருதுகிறீர்களா?

பதில்:- இதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

கேள்வி:- நீங்கள் கூறிய கருத்து தவறானது என்று சொல்கிறார்களே?

பதில்:- நான் இப்போது அதற்கு விளக்கம் கூறிவிட்டேன். இதில் தெளிவாக இருக்கிறது.

கேள்வி:- அந்த காலக்கட்டத்தில் பொது வாழ்க்கையில் இருந்தவர்கள்கூட இதை மறுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்தை கூறி வருகிறார்களே?

பதில்:- நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் கூறுகிறார்கள்.

மறக்கக்கூடிய சம்பவம்

கேள்வி:- மூடநம்பிக்கையை எதிர்த்து பேரணி நடத்தியதால்தான் செருப்பு வீசியதாக சொல்கிறார்கள். அதாவது, ரஜினிகாந்த் அந்த வரலாற்றை மாற்றிப் பேசுவதாக கூறுகிறார்களே?

பதில்:- நான் அந்த விஷயம் குறித்து தெளிவாக சொல்லிவிட்டேன். நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தான் இப்போது அதை கிளறுகிறீர்கள். சில அதிர்ச்சியான சம்பவங்களை மீண்டும் கொண்டுவரக் கூடாது. இது மறைக்கக்கூடிய சம்பவம் அல்ல. ஆனால், மறக்கக்கூடிய சம்பவம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘டிரெண்டிங்’கில் முதலிடம்

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் தொடர்பான கருத்துக்கு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ என்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். உடனே டுவிட்டரில் ரஜினி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ‘மன்னிப்பு கேட்க முடியாது’ என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்தனர்.

இந்திய அளவில் இந்த ஹாஷ்டேக் நீண்ட நேரம் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதேபோல் பேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகின.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.