Breaking News
மும்பை இந்தியன்சுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் ஹர்சல் பட்டேல்

சென்னை,

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டம் ரசிகர்கள் இன்றி சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் களம் கண்டன.

இதில், டாஸ் வென்று பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் (வயது 30) அதிரடியாக பந்து வீசினார். அவர் தனது 16வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ஹர்தீக் பாண்ட்யாவை வெளியேற்றினார்.

இதேபோன்று மற்றொரு அதிரடி வீரரான இஷான் கிஷான் 18வது ஓவரில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இத்துடன் பட்டேல் நின்றுவிடவில்லை. ஆட்டத்தின் இறுதி ஓவரில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். பட்டேல் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். அவர் இன்னிங்சின் இறுதி ஓவரை வீசி குருணல் பாண்ட்யா, மார்க்கோ ஜேன்சென், கீரன் பொல்லார்டு ஆகியோரை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

முதல் இரண்டு பந்து வீச்சில் குருணல் மற்றும் பொல்லார்டு ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டத்தில் சூடு பிடித்தது. அதன்பின்னர் ஜேன்சென் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜஸ்பிரீத் பும்ரா ஓவரின் இறுதி பந்தில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்யப்பட்டார்.

இதனால், மும்பை அணி 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஐ.பி.எல். போட்டிகளில் நடப்பு சாம்பியன்சான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ஹர்சல் பட்டேல் பெற்றுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.