Breaking News
ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்: பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா

புதுடெல்லி,

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களையும் கொரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

அதேபோல், சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சஹா மற்றும் டெல்லி அணியின் அமித்மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். இந்தத் தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கபட்டு புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.