Breaking News
அறிவோம் சிறுநீரகம்: நிரந்தர செயலிழப்பும்… காரணமும்… 6

சிறுநீரகங்கள் நிரந்தரமாக செயலிழந்து போவதற்கு மிக முக்கிய காரணங்களாக இருப்பது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி சிறுநீரக தொற்று ஏற்படுவது, சிறுநீரக அழற்சி, கல்லடைப்பு, இளம் வயதில் பிறவி கோளாறுகள், பரம்பரையாக தொடர்ந்து வரும் வியாதிகள், புரதம் கழிதல், சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், யானைக்கால் நோய், மலேரியா காய்ச்சல் தாக்கம், மஞ்சள் காமாலை தாக்கம், சிறுநீரகத்தில் காச நோய் உருவாதல் போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் நிரந்தரமாக செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதுமட்டுமல்ல அளவுக்கு அதிகமான வலிக்கான மாத்திரைகளை சாப்பிடுவது, புரோட்டின் சத்து தேவை என்று செயற்கையான புரோட்டின் மாவுகளை அதிக அளவில் சாப்பிடுவது, கால்சியம் தேவைக்காக தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது போன்றவையும் சிறுநீரக நிரந்தர செயலிழப்புக்கு காரணமாகி விடுகிறது.

உடலில் இருக்கும் மிக முக்கியமான எல்லா உறுப்புகளுடனும் சிறுநீரகங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டவை. உதாரணத்துக்கு கல்லீரலில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.

அதேபோல் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது சிறுநீரகத்தையும் தாக்கும். இதை நான் வேடிக்கையாக கூட குறிப்பிடுவது உண்டு. கல்லீரலும், சிறுநீரகமும் கணவன்-மனைவி போன்றது. கல்லீரல் ஒன்றுதான். ஆனால் சிறுநீரகம் இரண்டு. ஒருவனுக்கு இரண்டு மனைவி போன்றது என்று நகைச்சுவையாக குறிப்பிடுவேன்.

கடந்த காலங்களில் சிறுநீரகங்கள் தற்காலிக செயலிழப்பு ஏற்பட்டால் அதை குணப்படுத்தி விடலாம். அதன் பிறகு பிரச்சினை இருக்காது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் இப்போது நவீன மருத்துவ அறிவியல் ஆய்வுகள் மூலம் கிடைத்திருக்கும் தகவல் தற்காலிக செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு பிற்காலத்தில் நிரந்தர செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுதான்.

1984-ல் நான் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் பணியாற்றி கொண்டிருந்தேன். அப்போது தான் அங்கு சிறுநீரக துறை உருவாக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த காலக்கட்டத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவரை பரிசோதித்த போது அவருக்கு சிறுநீரகங்கள் நிரந்தரமாக செயலிழந்து இருப்பது தெரிய வந்தது. ஆனால் செயலிழந்து போனதற்கான எந்த அறிகுறியும் வெளியே தெரியவில்லை.

அவரிடம் கேட்ட போது விவசாய தொழில் செய்து வந்ததாகவும், வயலுக்கு உரம் போட செல்வது, நாற்று நடுவது போன்ற விவசாய வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இப்படி பட்டவருக்கு ஏன் சிறுநீரகம் செயலிழந்தது என்று அப்போது எங்களால் காரணங்களை அறிய முடியவில்லை.

ஆனால் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஒரு ஆய்வில் ஏராளமான இளம் விவசாயிகள் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்படுவது தெரிய வந்தது. அதற்கான காரணத்தை ஆராய்ந்த போது பூச்சிக்கொல்லி மருந்துகளை வயல்களில் பயன்படுத்துதல், அது கலந்த தண்ணீரை குடிப்பது போன்றவைதான் சிறுநீரக செயலிழப்புக்கு காரணம் என்பது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 35 வருடத்திற்கு முன்பு கண்டுபிடிக்க முடியாமல் போன காரணம் இப்போதுதான் அறிவியலின் முன்னேற்றத்தால் கண்டுபிடிக்க முடிந்தது.

சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மூன்று விதமான பரிசோதனைகளால் மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

முதலில் சிறுநீர் பரிசோதனை. இதற்கான செலவு ஒரு தேநீர் குடிப்பதற்கான செலவுதான். இந்த பரிசோதனையிலேயே ஓரளவு அறிகுறிகள் தெரிந்து விடும்.

அதன்பிறகு கிரியேட்டின் அளவை பார்க்க வேண்டும். அதைத்தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். இந்த அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை முடிவில் சிறுநீரகத்தின் அளவு மாறுபாடு தெரிய வரும்.

ஒரு சிறுநீரகம் 12 செ.மீ. நீளம், 6 செ.மீ. அகலம், 3 செ.மீ. அடர்த்தி கொண்டதாக இருக்கும். இந்த 12 செ.மீ. நீளம் சுருங்கி 9 செ.மீ. ஆகி இருந்தால் இதன்மூலம் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதேபோல் சிறுநீர் அடர்த்தி 10க்கு10 என்று இருந்தால் பாதிப்பு என்பது தெரிந்து விடும். இந்த சிறுநீர் பரிசோதனையை ஒருநாள் மட்டும் மேற்கொண்டால் போதாது. அதிகாலை எழுந்ததும் பரிசோதனைக்கு சிறுநீரை கொடுக்க வேண்டும். அவ்வாறு 3 நாட்கள் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும். 3 நாட்களும் அடர்த்தி 10க்கு 10 என்ற யூனிட் அளவிலேயே இருந்தால் சிறுநீரகம் நிரந்தரமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம்.

சிறுநீரகத்தில் துளை போட்டு தசையை எடுத்து பரிசோதித்து கண்டுபிடிக்கும் முடிவை சாதாரண சிறுநீரில் இருந்தே கண்டுபிடித்து விட முடியும். அதாவது அந்த சோதனையை தொடர்ந்து முறையாக 3 நாட்கள் செய்தாலே கண்டுபிடித்து விடலாம்.

குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. சிறுநீரின் நிறம், அதன் அடர்த்தி எவ்வளவு இருக்கிறது. ஆல்புமின் அளவு, சிறுநீரில் சர்க்கரை அளவு, கற்கள் உருவாகி இருக்கிறதா, புற்றுநோய் வருவதற்கான அறிகுறி தெரிகிறதா, காசநோய் வருகிறதா என்பதையெல்லாம் இந்த பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இப்போது நவீன மருத்து வத்தில் ஈ.ஜி.எப்.ஆர் அளவு பார்க்கப் படுகிறது. இது சிறுநீரக முடிச்சு களில் இருந்து சிறுநீரை பிரித்து வடி கட்டும் திற னை கண்டு பிடிப் பது தான். இந்த திறன் அடிப் படையில் தான் எவ்வளவு டோஸ் மருந்து கொடுக்க வேண் டும். டோசை கூட்டு வதா? குறைப் பதா? என்பதை யெல்லாம் மருத்து வர்கள் முடிவு செய் வார்கள்.

எனவே இந்த விசயத்தில் பொது மக்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும். பொதுவாக ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் போது பிரஷ்‌ஷர் இருக்கிறதா டாக்டர் என்று சாதாரணமாக கேட்பார்கள். அதேபோல் காய்ச்சலை பார்க்கும் போதும் காய்ச் சல் எவ்வளவு இருக்கிறது என்று கேட்கும் பழக்கமும் இருக்கிறது.

அதேபோலத்தான் இந்த சிறுநீரக பரிசோதனைக்கு செல்லும் போது இ.ஜி.எப்.ஆர். எவ்வளவு இருக்கிறது டாக்டர் என்று கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டாலே அதை பரிசோதித்து சொல்லி விடுவார்கள்.

நான் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய போது அங்குள்ள சமூக மருத்துவதுறை நிபுணர்களுடன் இணைந்து ஏராளமான நோயாளிகளை பரிசோதித்து இ.ஜி.எப்.ஆர். கண்டுபிடிப்பதற்கான ஒரு செயலியை கண்டுபிடித்தோம். இந்த செயலியின் மூலம் இந்தியர்களின் இ.ஜி.எப்.ஆர். அளவை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். கூகுளில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மருத்துவர்கள் மருத்துவத்தால் வியாதியை குணப்படுத்துவார்கள். அதேநேரம் பொதுமக்களும் போதிய விழிப்புணர்வுடன் இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.