Breaking News
நாங்கள் வென்றால் ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் கைதாவது உறுதி: மிஷ்கின்

எங்கள் அணி வெற்றியடைந்தால் ஒரே மாதத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் கைது செய்யப்படுவார் என இயக்குநர் மிஷ்கின் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி என 3 அணிகள் போட்டியிடுகின்றன.

இதில் விஷால் தலைமையிலான அணியின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை விளக்கும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை கடுமையாக சாடிப் பேசினார் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “தம்பி… தமிழ்ராக்கர்ஸ். நீ எங்கள் உழைப்பை சுரண்டுவதோடு மட்டுமில்லாம ‘நாளைக்கு காலையில் பதினொரு மணிக்கு இந்தப்படத்தை வெளியிடுவேன். முடிஞ்சா தடுத்து பாரு’ என்று சவால் விடுகிறாய்.

நிச்சயம் உனக்கு தண்டனை உண்டு. நாங்க வெற்றிபெற்று வந்த ஒரே மாசத்துல நீ எங்கயிருந்தாலும் கைது செய்யப்படுவாய். இதை எச்சரிக்கையாக சொல்ல ஆசைப்படுறேன்” என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார் இயக்குநர் மிஷ்கின்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.