Breaking News
ஏற்காடு சாலையின் வரலாறு

மலை முகடுகளை தொட்டுச் செல்லும் மேகங்கள், அந்த மேகங்களை தொட்டணைத்து நிற்கும் வானுயர்ந்த மரங்கள், வழியெங்கும் வகிடுகளாய் வளைவுகள், இதயம் வருடும் இனிய காற்று’ இத்தனையும் கடந்து சென்றால் பரந்து விரிந்த ஏரி, பசுமை போர்த்திய ரோஜாத்தோட்டம், பக்கவாட்டில் அருவிகள்’ என்று காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து மனதை நிறைவடையச் செய்யும் இயற்கையின் அதிசயம் தான் ‘ஏழைகளின் ஊட்டியான’ ஏற்காடு. திருமணி முத்தாறு, வசிஷ்ட நதி போன்ற புனிதங்களின் பிறப்பிடமான ஏற்காடு மலையில் பாதை அமைக்கப்பட்டு நூறாண்டு கடந்து விட்டது. நூற்றாண்டு மகிழ்வைக் கொண்டாடும் இத் தருணத்தில் அதன் தொன்மையான வரலாற்றுப் பாதையை திரும்பிப் பார்ப்போம்.

சேலம் மாவட்டம் பாண்டிய, பல்லவ, சோழ மற்றும் ஹொய்சால ராஜ்ஜியத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. 14 வது நூற்றாண்டில் மாலிக்காப்பூராஸ் ஆட்சியின் கீழ் சேலம் மாவட்டம் நிர்வகிக்கப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு பின் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின் சேலம் கோட்டையினை ஹைதர் அலி கைப்பற்றினார். பின் திப்புசுல்தானின் தோல்விக்குப் பிறகு 1772ம் ஆண்டில் சேலம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய படைக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே 1792ல் நடந்த போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு பாராமஹால் மற்றும் சேலம் மாவட்டம் 1792ல் உருவாக்கப்பட்டது.
1801ல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டது.

பின்னர் 1808ல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட கலெக்டராக இருந்த போது சேலம் மாவட்டம் உருவாயிற்று. 1820 முதல் 1829ம் ஆண்டு வரை சேலத்தில் கலெக்டராக இருந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் காக்பர்ன் ஏற்காட்டின் தந்தையாக பாவிக்கப்படுகிறார். ஏற்காடு மலைத்தொடர் முதன் முதலாக கண் டறியப்படுவதற்கு முன்னாள் இருளடைந்த காடுகளாக இருந்தது. இவரது காலத்தில் தான் சேர்வராயன் மலைப்பகுதியில் காபி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் பயிரிடப்பட்டது. சேர்வராயன் மலைக்கு பின்னரே தமிழகத்தின் நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களுக்கும் காபி பயிரிடுவது விரிவடைந்தது. முதன் முதலில் 1827ல் சேர்வராயன் மலைப்பகுதியில் சர்வே மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது சேர்வராயன் மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. 19ம் நூற்றாண்டுகளில் யானைகளின் நடமாட்டம் இப்பகுதிகளில் இல்லை. இதனிடையில் 1836ம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த பிஷர் என்பவர் சேலம் ஜமீன்தாரின் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விலைக்கு வாங்கினார். அவரைத் தொடர்ந்து சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்கள் உள்ளடக்கிய நிலங்களை பெரிய பணக்கார முதலாளிகள் வாங்க முன்வந்தனர். பாண்டிச்சேரியில் இருந்து வந்த சில பிரஞ்சுக்காரர்களும், கிறிஸ்தவர்களும் இதில் அடக்கம். இவர்களுடன் ஏற்காடு பகுதியில் குடியேறிய கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையினர் ஆவர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.