Breaking News
‘அண்ணாதுரை’ ஒத்திவைப்பு: மே மாதம் முதல் ‘காளி’ தொடக்கம்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகவிருந்த ‘அண்ணாதுரை’ படம் ஒத்திவைக்கப்பட்டு, ‘காளி’ திரைப்படம் மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

‘எமன்’ படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘அண்ணாதுரை’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் ஆண்டனி. நடிகை ராதிகா தயாரிக்கவிருந்த இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது ‘அண்ணாதுரை’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘காளி’ படத்தை மே மாதம் முதல் தொடங்கவுள்ளார்கள். இப்படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து, தயாரிக்கவுள்ளார். தற்போது இப்படத்துக்கான நாயகி தேர்வு படலத்தை தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு.

‘காளி’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனியை இயக்கவிருப்பது குறித்து கிருத்திகா உதயநிதி, “பெரும்பாலான ஹீரோக்களைப் போல் விஜய் ஆண்டனி வழக்கமான படமாக எதையும் செய்வதில்லை. உங்களிடம் ஒரு நல்ல கதை, வழக்கத்தை விட சற்றே வித்தியாசமாக இருந்தாலும் அதை கேட்கத் தயாராக இருப்பார். அவரது ஆதரவு அந்த புதிய கதையின் சாத்தியங்களை அதிகரிக்கும்.

கடந்த வருடம், ஒரே நேரத்தில் ’சைத்தான்’ மற்றும் ’எமன்’ நடித்துக்கொண்டிருந்தபோது அவரை நான் சந்தித்தேன். அந்த படங்கள் முடிந்ததும் என் கதையை கேட்கிறேன் என்று சொன்னார். மூன்று மாதம் கழித்து நான் யோசித்து வைத்திருந்த க்ரைம்-த்ரில்லர் கதையைப் பற்றி சொன்னதும் இணைந்து பணியாற்றுவோம், என்ன நடக்கிறது என பார்க்கலாம் என்றார்.

அப்போதுதான் ‘காளி’ படத்தின் கதையை சொன்னேன். அது என் மனதுக்கு நெருக்கமான கதை. அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மே மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.