Breaking News
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 10–வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்?

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது. ‘களிமண்தரை’யின் நாயகன் என்று வர்ணிக்கப்படும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 10–வது முறையாக பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிரெஞ்ச் ஓபன்
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்கி 11–ந்தேதி வரை நடக்கிறது. இது களிமண் தரையில் நடக்கும் போட்டியாகும்.

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்களான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) உடல்தகுதியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) குழந்தை பிறப்புக்காகவும் பிரெஞ்ச் ஓபனில் விளையாடவில்லை. பிரெஞ்ச் ஓபன் வரலாற்றில் ஆஸ்திரேலிய நடப்பு சாம்பியன்கள் இருவரும் ஆடாதது இதுவே முதல் நிகழ்வாகும்.

நடாலுக்கு வாய்ப்பு
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கடும் போட்டி காணப்பட்டாலும் 4–ம் நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. காயத்தால் இரண்டு ஆண்டுகள் தடுமாறிய நடால் இப்போது மீண்டும் எழுச்சி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த சீசனில் மான்ட்கார்லோ, மாட்ரிட், பார்சிலோனா ஆகிய போட்டிகளில் வாகை சூடியிருக்கிறார். இவை எல்லாம் களிமண்தரை போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

2014–ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றதே அவரது கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். தனது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 15–ஆக உயர்த்திக்கொள்ள அவருக்கு நல்ல சந்தர்ப்பம் கனிந்துள்ளது. அத்துடன் பிரெஞ்ச் ஓபனை ஏற்கனவே 9 முறை சுவைத்துள்ள அவர் இந்த முறையும் வசப்படுத்தினால், ‘ஓபன் எரா’ வரலாற்றில் குறிப்பிட்ட கிராண்ட்ஸ்லாமை 10 தடவை வென்ற முதல் வீரர் என்ற அரிய சிறப்பை பெறுவார். முதல் சுற்றில் அவர் 45–ம் நிலை வீரரான பிரான்சின் பெனோய்ட் பேரை எதிர்கொள்கிறார்.

ஜோகோவிச்
நடப்பு சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச், ‘நம்பர் ஒன்’ வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, முன்னாள் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, ‘இளம் புயல்கள்’ ஆஸ்திரியாவின் டொமினிக் திம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கனடாவின் மிலோஸ் ராவ்னிக் ஆகியோரும் வரிந்து கட்டி நிற்பார்கள்.

இதில் நடாலும், ஜோகோவிச்சும் அரைஇறுதியில் நேருக்கு நேர் கோதாவில் இறங்க வேண்டி வரலாம். புதிய பயிற்சியாளர் ஆந்த்ரே அகாசியின் கீழ் தன்னை பட்டை தீட்டி வரும் ஜோகோவிச் தனது முதல் ரவுண்டில் மார்செல் கிரானோலர்சை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார்.

கெர்பர்–ஹாலெப்
பெண்கள் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, சிமோனா ஹாலெப் (ருமேனியா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), சிபுல்கோவா (சுலோவக்கியா), ஜோகன்னா ஹோன்டா (இங்கிலாந்து), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), குஸ்னெட்சோவா (ரஷியா) உள்ளிட்டோர் பட்டத்திற்கான வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்கள். இதில் சமீபத்தில் களிமண் தரை போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ள ஹாலெப், ஸ்விடோலினா ஆகியோருக்கு வாய்ப்பு சற்று அதிகமாக தென்படுகிறது. கெர்பர் தனது முதல்சுற்றில் ரஷியாவின் அனுபவ மங்கை மகரோவை சந்திக்கிறார்.

இந்திய தரப்பில் ஒற்றையர் பிரிவில் யாரும் ஆடவில்லை. சானியா மிர்சா, லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா இரட்டையர் பிரிவில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

பரிசு எவ்வளவு?
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.260 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா ரூ.15 கோடியுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் அள்ளலாம். 2–வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.7¼ கோடி கிடைக்கும். முதல் சுற்றில் தோற்போர் கூட ரூ.24 லட்சத்தை பரிசாக பெறுவார்கள். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடிக்கு ரூ.4¾ கோடி வழங்கப்படும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் நாளில் ஏஞ்சலிக் கெர்பர், கத்திக்குத்து காயத்தில் இருந்து குணமடைந்தள்ள கிவிடோவா (செக்குடியரசு), வீனஸ் வில்லியம்ஸ், டொமினிக் திம் உள்ளிட்டோர் களம் காண உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.