
தூத்துக்குடி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையினை கலெக்டர் லட்சுமிபதி பயனாளிக்கு வழங்கினார்
தூத்துக்குடி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், நீர்வளத்துறை மற்றும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி,குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
நீர்வளத்துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி குளம் கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும், இதன் மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு, ஏரி குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழைநீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தினை எளிமையாக செயல்படுத்திட, தமிழ்நாடு சிறுகனிம சலுகைவிதிகள், 1959-ல் அரசு ஆணை எண்.14, இயற்கை வளங்கள் துறை, நாள் 12.06.2024 அன்று திருத்தம் செய்யப்பட்டு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த வட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். நீர்வளத்துறை மற்றும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் உதவி இயக்குநர், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் பொறுப்பாளர்களுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்திட வழிகாட்டும் நெறிமுறைகள் இயற்கை வளங்கள் துறையால் 25.06.2024 அன்று வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி ஆணைகளைவழங்கி, தொடங்கிவைத்தார். அதன்படி, விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வோர் இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் குளத்தூர் தெற்குகண்மாயிலிருந்து வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையினை கலெக்டா லட்சுமிபதி பயனாளிக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) முனைவர் சுகதாரஹிமா, செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணிமற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சாந்திராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) மனோரஞ்சிதம், விளாத்திக்குளம் வட்டாட்சியர் (பொ) விமலா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்