
கோவில்பட்டி இரட்டை கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி நடவடிக்கை
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 100 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் தகோ. லட்சுமிபதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 07.06.2024 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே உள்ள மீன் கடையில் வைத்து கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் வெள்ளத்துரை (49) மற்றும் கோவில்பட்டி கிழக்கு பாண்டவர்மங்கலம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மகாராஜன் (எ) டீலக்ஸ் ராஜா (55) ஆகிய இருவரையும் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில், கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துராஜ் (எ) கார்த்திக் (32), கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ்நகர் பகுதியில் சேர்ந்த பால்சாமி மகன் மாரிராஜ் (32) மற்றும் கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகரை சேர்ந்த காளியப்பன் மகன் சேர்மக்கனி (30) ஆகிய மூன்று பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான முத்துராஜ் (எ) கார்த்திக், மாரிராஜ் மற்றும் சேர்மக்கனி ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமுருகன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் 1) முத்துராஜ் (எ) கார்த்திக், கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ்நகர் பகுதியில் சேர்ந்த பால்சாமி மகன் 2) மாரிராஜ் மற்றும் கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகரை சேர்ந்த காளியப்பன் மகன் 3) சேர்மக்கனி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமுருகன் சம்மந்தப்பட்ட எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
இந்தாண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 100 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.