Breaking News
குடியரசு தின விழாவில் 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

தலைநகர் டெல்லியில் இந்தியா, ஆசியான் நாடுகளின் 15–வது உச்சி மாநாடு அடுத்த மாதம் 25–ந் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் ஆசியான் என்னும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 10 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அந்த நாடுகள், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புரூனை ஆகும்.

இந்த நாடுகளின் தலைவர்கள் அடுத்த மாதம் 24–ந்தேதி டெல்லி வந்து சேருகிறார்கள். அன்று மாலை அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருந்து அளித்து கவுரவிக்கிறார். மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளிக்கிறார்.

அடுத்த மாதம் 26–ந் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெறுகிற குடியரசு தின விழாவில் இந்த 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆசியான் நாடுகளுடன் இந்தியா 25 ஆண்டுகளாக நல்லுறவு பராமரித்து வருவதின் வெள்ளிவிழா கொண்டாட்டமாக இந்தியா, ஆசியான் நாடுகளின் 15–வது உச்சி மாநாடு அமைவது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.