Breaking News

கடும் கோடைகாலம் அதன் உச்சத்தை எட்டும் நாட்கள் நெருங்கி வரும்போது வெப்பநிலை இன்னும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய வெளிச்சம், தூசி மற்றும் மாசு ஆகியவற்றை கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், பல்வேறு கண் பாதிப்புகள் உருவாகும் சாத்தியம் அதிகமாக இருக்கும். இவைகளுக்கு உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் கடுமையான கண் பிரச்சனையை இது விளைவிக்கும். எனவே, கோடை காலத்தில் உங்கள் கண்களை கூடுதல் அக்கறையுடன் பராமரிப்பது அத்தியாவசியம்.கோடை காலத்தில், உலர்ந்த கண்கள், கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமையினால் ஏற்படும் கண் அழற்சி மற்றும் கண் காயங்கள் ஆகியவை பொதுவாக அதிகளவில் ஏற்படுகிற கண் நோய்களாக இருக்கின்றன என்கிறார் *டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். ஶ்ரீனிவாச ராவ்*. சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு, ஒவ்வாமைகள் மற்றும் காயங்களிலிருந்து உங்கள் கண்களை பாதுகாப்பது மிக முக்கியமானது. அப்போது தான் உங்கள் கண்களை ஆரோக்கியமாக பேணி பாதுகாக்கவும் மற்றும் இப்பருவ காலத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கவும் இயலும்.டாக்டர். ஶ்ரீனிவாச ராவ் இது குறித்து கூறியதாவது: “ஈரப்பதத்துடன் வைத்திருக்க போதுமானளவு கண்ணீரை உங்கள் கண்கள் சுரக்காதபோது உலர்ந்த கண்கள் பிரச்சனை ஏற்படுகிறது. இது நிகழாமல் தடுக்கவும் மற்றும் உங்கள் கண்களை ஈரப்பதத்துடன் வைக்கவும், செயற்கை கண்ணீரை அல்லது கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இளம் சிவப்பு கண் நோய் (pink eye) என்றும் அறியப்படுகிற கண் அழற்சி பாதிப்புகள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்துவருவதை நாங்கள் பார்க்கிறோம். கண் அழற்சி என்பது, கண் இமைக்கு உள்ளே இருக்கும் மெல்லிய, தெளிவான திசுவில் வீக்கம்/அழற்சியை குறிக்கிறது. கண்ணின் வெண்மையான பகுதியில் இந்த அழற்சி உருவாகிறது. இது வராமல் தடுப்பதற்கு, அழுக்கான கைகளால் உங்கள் கண்களை தொடாமல் தவிர்க்க வேண்டும்; அடிக்கடி உங்கள் கைகளை கழுவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சு, பல கண் நோய்களை விளைவிக்கக்கூடும். கண் புரை நோய், விழிப்புள்ளிச் சிதைவு, புறஊதா கதிர்களால் ஏற்படும் ஃபோட்டோகரட்டாடிஸ் ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும். இத்தகைய நோய்கள் வராமல் தடுப்பதற்கு கோடை காலத்தில் வீட்டிற்கு வெளியே நீங்கள் இருக்கும்போதெல்லாம் 100% புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகிற குளிர் கண்ணாடிகளை (சன் கிளாஸ்) அணிய வேண்டும்.”கோடை காலத்தில் கண் நோய்கள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து உங்களது கண்களை பாதுகாக்க கீழ்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென *டாக்டர். ஶ்ரீனிவாச ராவ்* பரிந்துரைக்கிறார்.1. உராய்வு ஏற்படாமல் தடுக்கும் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தவும் – போதுமானளவு கண்ணீரை கண்கள் உற்பத்தி செய்யாத அல்லது கண்ணீர் மிக வேகமாக ஆவியாகிவிடும் ஒரு பாதிப்பு நிலையான உலர்ந்த கண் பிரச்சனைக்கு கோடை கால வெப்பம் வழிவகுக்கும். இது நிகழாமல் தடுக்க உங்களது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டவாறு உராய்வை தடுக்கும் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தவும். உலர்ந்த கண் பிரச்சனை அறிகுறிகளை இன்னும் மோசமாகக்கூடிய இரத்தநாள சுருக்கி மருந்தை உள்ளடக்கிய கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.2. உங்கள் கண்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் – கோடை வெப்பமும், தீவிர ஈரப்பதமும், கண் அழற்சி அல்லது இளஞ்சிவப்பு கண் பாதிப்பு உட்பட கண் தொற்றுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கக்கூடும். கண் தொற்றுகள் வராமல் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; உங்கள் கண்களை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக நீங்கள் இருப்பின், இந்த லென்ஸ்களை கண்ணில் பொருத்துவதற்கும் அல்லது அகற்றுவதற்கும் முன்னதாக உங்களது கைகளை கழுவுவது உட்பட முறையான தூய்மை நடைமுறைகளை கடைபிடிக்கவும்.3. புறஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் குளிர் கண்ணாடிகளை அணியவும் – சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சினால் (UV), கண் புரை நோய், விழிப்புள்ளிச் சிதைவு, புறஊதா கதிர்களால் ஏற்படும் ஃபோட்டோகரட்டாடிஸ் ஆகிய பல கண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வெளியே செல்லும்போது புறஊதா கதிர்களிலிருந்து 100% பாதுகாப்பை தரும் குளிர் கண்ணாடிகளை அணிவது அத்தியாவசியம். போலரைஸ்டு லென்ஸ்களைக் கொண்ட குளிர் கண்ணாடிகள் சூரிய ஒளி பிரதிபலிப்பை குறைத்து பார்வைத் தெளிவை மேம்படுத்தக்கூடியவை.4. நீர்ச்சத்து குறையாதவாறு பானங்களை அருந்தவும் – உலர்ந்த கண்கள் உட்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகள் நமது உடலில் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும். இது நிகழாமல் தடுக்க கோடை காலத்தில் அதிக அளவு தாராளமாக தண்ணீரை அருந்தவும்; சர்க்கரை மற்றும் கஃபைன் அடங்கிய பானங்கள் உடலின் நீர்ச்சத்தை குறைக்கும் என்பதால் அவைகளை தவிர்க்கவும். வெளிப்புற செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபடுவீரானால், நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதற்கு அடிக்கடி தண்ணீர் அருந்துவதற்காக இடைவேளைகள் எடுத்துக்கொள்ளவும்.5. வேதிப்பொருட்களிலிருந்து உங்கள் கண்களை பாதுகாக்கவும் – கோடைகாலம் என்றாலே நீச்சல் குளத்தில் நீண்டநேரம் செலவிட தோன்றும்; ஆனால், அதில் இருக்கக்கூடிய குளோரின் உங்களது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கண் எரிச்சல் மற்றும் கண் சிவத்தலை விளைவிக்கக்கூடிய குளோரினிலிருந்து உங்களது கண்களை பாதுகாக்க நீச்சலுக்கான கண் கவசங்களை அணியவும். வேதிப்பொருட்களை பயன்படுத்தும்போது, அவற்றால் தீக்காயங்கள் அல்லது பிற கண் காயங்கள் நிகழாமல் தடுக்க பாதுகாக்கும் கண் கவச சாதனத்தை தவறாமல் அணியவும்.6. ஒவ்வாமைகள் பற்றி அறிந்து விழிப்புணர்வுடன் இருக்கவும் – கோடைகால ஒவ்வாமைகள் உங்களது கண்களையும் பாதிக்கக்கூடும்; கண் சிவத்தல், அரிப்பு மற்றும் நீர் வடிதல் போன்றவை இதனால் ஏற்படும் சில பாதிப்புகளாகும். ஒவ்வாமைகளினால் அவதியுறுபவராக நீங்கள் இருப்பின், ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் அல்லது உங்களது கண் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். கண்களை தேய்ப்பதும், கசக்குவதும் பாதிப்பு அறிகுறிகளை மோசமாக்கி கண் தொற்றுகளுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என்பதால், அவ்வாறு செய்வதை தவிர்க்கவும்.7. கண் நோய்களின் அடையாளங்களை அறிந்திருக்கவும் – விழிப்புள்ளி சிதைவு அல்லது கண் அழுத்த நோய் போன்ற சில கண் நோய்கள் காலப்போக்கில் மெதுவாக வளர்ச்சிகாணக்கூடியவை; முதிர்ச்சியடையும் வரை அதன் அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம். எனவே, ஆரம்ப நிலையிலேயே கண் நோய்களை கண்டறிவதற்கு குறித்த காலஅளவுகளில் செய்யப்படும் கண் பரிசோதனைகளில் உதவக்கூடும். இதன் மூலம் சிகிச்சையின் விளைவுகளும் சிறப்பாக இருக்கும். பார்வைத்திறனில் திடீர் மாற்றங்கள் அல்லது கண் வலி உங்களுக்கு ஏற்படுமானால், உடனடியாகவே கண் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறவும்.8. திரையை பார்ப்பதிலிருந்து அடிக்கடி இடைவேளை எடுக்கவும் – கோடைகால விடுமுறைக் காலம் என்றாலே திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்ப்பதில் அல்லது வீடியோ கேம்கள் விளையாடுவதில் நீண்ட நேரத்தை நாம் செலவிடுவதுண்டு. நீண்டநேரம் திரையை பார்த்துக் கொண்டிருப்பது டிஜிட்டல் கண் அழுத்தத்திற்கு வழிவகுக்கும்; இதனால் கண்களில் களைப்பு, எரிச்சல், வறட்சி ஆகியவை ஏற்படும். இப்பாதிப்பு நிகழாமல் தடுக்க திரையை பார்க்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்துக்கொள்ளவும். 20-20-20 என்ற விதியினை பின்பற்றவும்: அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தள்ளியிருக்கும் ஏதாவதொன்றை 20 நொடிகள் உற்றுப்பார்க்கவும்.*கண் மருத்துவ நிபுணர் டாக்டர். ஶ்ரீனிவாச ராவ்* மேலும் பேசுகையில், “கண் பிரச்சனைகளை கண்டறிவதற்கு குறித்த காலஅளவுகளில் கண் பரிசோதனைகளை திட்டமிட்டு செய்துகொள்வதும் மற்றும் அவைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதும் மிகவும் முக்கியம். புகைப்பிடிப்பதனால் கண் புரை நோய் மற்றும் விழிப்புள்ளி சிதைவு உட்பட பல்வேறு கண் பிரச்சனைகளுக்கான இடர்வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதால் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நல்லது,” என்று கூறினார்.மேற்குறிப்பிட்ட ஆலோசனை குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் கோடைகாலத்தில் ஏற்படும் கண் பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும்; கண் நோய்கள் மற்றும் பிரச்சனைகள் இல்லாமல் கோடை விடுமுறை காலத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம்.Media Contact : Mahesh Kumar ./ 98845 45000

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.