Breaking News
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியீடு…!

சென்னை,

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவதோடு, விலை மதிப்பில்லாத மனித உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் ஏராளமான குடும்பங்களை சீரழித்துள்ளது.

உயிர் கொல்லியான ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போடும் வகையில், தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இந்த மசோதா கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை கவர்னர் தரப்பில் இருந்து, தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசும், கவர்னர் கேட்ட விளக்கத்தை தெரிவித்தது. ஆனாலும் கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. உயிர்ப்பலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழ்நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் 8-ந் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதற்கான காரணம் குறித்து கவர்னர் அளித்த விளக்கத்தில், “ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை மு.க.ஸ்டாலின் மீண்டும் பேரவையில் தாக்கல் செய்தார். 24-ந் தேதியன்று அதாவது மறுநாளே இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு மீண்டும் அனுப்பிவைத்தது. இந்த முறையாவது கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிடுவார் என்று தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவனர்னருக்கு எதிராக நேற்று காலை அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளான நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி நேற்று மாலை ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த சட்டம் நடைமுறைக்கு வருவதால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் வருமாறு:- ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.