Breaking News
சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் போக்குவரத்தை மோடி இன்று தொடங்கி வைக்கிறார் திருப்பூரில் நடைபெறும் விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரையிலான 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையேயான 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வந்தன.

மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தில், ஏற்கனவே 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது, சென்டிரலில் இருந்து விமானநிலையம் வரையிலும், விமானநிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலும் ஏற்கனவே ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் டி.எம்.எஸ்.சில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மீதம் உள்ள வழித்தடத்தில் சுரங்கப்பாதை, ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமை அடைந்து உள்ளன.

இதில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல் 2-ம் அடுக்கு, ஐகோர்ட்டு, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.

மொத்தத்தில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 19 ஏ.சி. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள், 13 உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரெயில் நிலையங்கள் உள்ளன. பயணிகள் பாதுகாப்புக்காக பிளாட்பாரம் மேடை திரைக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் முழுமை அடைந்து உள்ளது.

பணிகள் நிறைவடைந்த டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

இதற்கான விழா திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தையும், மெட்ரோ ரெயில் நிலையங்களையும் தொடங்கி வைக்கிறார்.

மேலும் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடத்தையும், எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அத்துடன் திருப்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கும், சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் பி.தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க் கள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் இந்த விழாவை காணும் வகையில் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு எதிரே சுமார் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டு, அதில் பெரிய அளவிலான எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டு உள்ளது.

சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள 2 அடுக்குகளில் முதல் அடுக்கில் கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்கள் கையாளப்படுகின்றன. அதற்கு கீழ் சுமார் நூறு அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள 2-வது அடுக்கில் அண்ணாசாலை மார்க்கத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி வரும் ரெயில்கள் கையாளப்பட உள்ளன.

2-வது அடுக்கில் உள்ள பிளாட்பாரத்தில் எல்.இ.டி. திரையுடன் மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரெயில் போக்குவரத்தை மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததும், அந்த மேடையில் இருக்கும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், எம்.சி.சம்பத் ஆகியோர் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயிலுக்கு பச்சை கொடி காட்டுவார்கள்.

அவர்கள் கொடி அசைத்ததும் அந்த முதல் ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி புறப்பட்டு செல்லும். ரெயிலில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்கின்றனர். பின்னர் அதே ரெயில் வண்ணாரப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். வரை தொடர்ந்து இயங்குகிறது.

விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இறுதி கட்டமாக ரெயிலை ஓட்டிப்பார்த்து சோதனையும் நடத்தப்பட்டது.

திருப்பூர் விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு கோவை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெருமாநல்லூர் செல்கிறார். ஹெலிபேடு தளத்தில் இருந்து கார் மூலம் 3.15 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு சென்று அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

அது முடிந்ததும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். அங்கு கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதிகளின் பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் 4.25 மணிக்கு கிளம்பி கோவை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் உப்பள்ளி நகருக்கு செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

மோடியை வரவேற்கும் விதமாக பாரதீய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி தோரணங்கள் கட்டி விளம்பர பதாகைகள் வைத்து உள்ளன. அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.