Breaking News
தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது. இதன் மூலம் டெல்லி போலீஸ் யாரையும் விசாரணை எதுவும் இன்றி 12 மாதங்கள் சிறையில் வைத்து இருக்கலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதமானது.

எனவே இந்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில் டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்துசெய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் எம்.எல்.சர்மா, தானே ஆஜராகி வாதாடினார்.

அவர் தன் வாதத்தில், “ஜனவரி 19-ந்தேதியில் இருந்து டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை கவர்னர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை போலீசாரால் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

இதன் மூலம் தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராடுபவர்களை சிறையில் தள்ளுவதற்காக தவறாக பயன்படுத்தப்படும்” என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள், “அப்படி இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்திய சம்பவங்களோ அல்லது ஆதாரங்களோ உள்ளதா? அப்படி ஏதேனும் குறிப்பாக நிரூபித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். இப்படி பொதுவாக நாங்கள் எதையும் கூறமுடியாது.

முகாந்திரம் ஏதும் இல்லாமல் இப்படி வெறுமனே எப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கோரமுடியும்?

அப்படி இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக குறிப்பிட்ட சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் நீங்கள் கோர்ட்டை அணுகலாம்” என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மனுதாரர் எம்.எல்.சர்மா தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.