Breaking News
வங்கதேசத்துக்கு எதிராக தீவிரம் குறையாமல் விளையாடுவோம்: விராட் கோலி உறுதி

வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தீவிரம் குறையாமல் விளையாடுவோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – வங்கதேச அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அதே பர்மிங்காம் மைதானத்தில் தான் அரையிறுதிப் போட்டியும் நடக்கவுள்ளது.

இது பற்றி பேசிய கோலி, “நாங்கள் பர்மிங்காம் மைதானத்தில் விளையாடியுள்ளோம். அந்த களம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. எங்கள் ஆட்டத்துக்கு தோதாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டோம், அந்த வெற்றியையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. முன்னேற வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

ஆசிய கண்டத்தை சேர்ந்த 3 அணிகள் சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிக் கட்டத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் நாம் விளையாடும் ஆட்டங்களின் எண்ணிக்கை என்றே நினைக்கிறேன். நெருக்கடியான ஆட்டங்களில் வீரர்கள் அதிகமாக அனுபவம் பெறுகிறார்கள் என நினைக்கிறேன். தொடரில் சில அணிகள் எதிரணியை பேட்டிங் மற்றும் பவுலிங்கால் ஆச்சரியப்படுத்தியுள்ளது” என்று கோலி கூறினார்.

வங்கதேச அணி நியூஸிலாந்தை வீழ்த்தியதோடு, இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால், வங்கதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி பெறும் என்ற சூழலிலிருந்து மீண்டு வந்து பெற்ற வெற்றி தங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும் என வங்கதேச அணித் தலைவர் மொர்டாஸா தெரிவித்துள்ளார்.

“கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் நன்றாக முன்னேறி வருகிறோம். நியூஸிலாந்தை வீழ்த்தியது போன்ற ஆட்டங்கள் நான் முன்னேறிச் செல்ல உதவி புரியும். முக்கியமாக 2019 இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தயாரிப்புக்கு உதவியாயிருக்கும்”என்றார்.

இந்தியாவும் வங்கதேசம் இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் வங்கதேசம் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.