Breaking News
வடகொரிய தலைவரை விரைவில் சந்தித்து பேச்சு வார்த்தை – டிரம்ப் அறிவிப்பு

எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை போர் நடத்தி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் (வயது 71), வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் (34) சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12-ந்தேதி உச்சி மாநாட்டில் சந்தித்து பேசியது உலகையே அதிர வைத்தது.

இந்தப் பேச்சு வார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியா முன் வந்தது. இது தொடர்பாக டிரம்புடன், கிம் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, வடகொரியா அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதிக்கவில்லை.

சமீபத்தில் டிரம்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்து, கிம் ஒரு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் நியூயார்க் நகரில் டிரம்ப், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ வடகொரிய தலைவர் கிம்மை விரைவில் மீண்டும் சந்திக்கப்போகிறேன். இந்த சந்திப்பு வெகு தொலைவில் இல்லை. எங்கு வைத்து இந்த சந்திப்பை நடத்துவது என்பது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சந்திப்பு தேதியும் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அதை அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.

டிரம்ப், மூன் ஜே இன் சந்திப்பு பற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கையில், “டிரம்ப், கிம் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசுவது தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர். மூன் ஜே இன், கிம்மை 3 முறை சந்தித்து பேசியதற்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்” என கூறியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.