Breaking News
ரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல் அரைவேக்காடு –சரம்வாரியாக விளாசிய எழுத்தாளர்!

சமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினியின் அரசியல் வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கமல் ஒருபடி முன்னால் போய் கட்சி ஆரம்பித்து மக்களைச் சந்தித்து வருகிறார். இடைத் தேர்தலில் பங்கேற்போம் எனவும் அறிவித்துள்ளார். சமீபத்திய சர்கார் படம் மூலம் விஜய்யும் தனது அரசியல் வருகைக்கு ஆருடம் கூறியுள்ளார்.

ஆனால் இவர்களின் அரசியல் குறித்த புரிதலோ மத்திய தர வர்க்க மணப்பாணமை போலவே உள்ளதாக பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. உதாரணமாக சர்கார் படத்தில் அரசு ஏழை எளியோர்க்கு இலவசமாகக் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை தீயில் போட்டு எரிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் இந்த திட்டங்கள் மிகப்பெரிய ஊழல் திட்டங்கள் போலவும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த காட்சிகளைப் பார்த்து பொங்கியெழுந்த விஜய் ரசிகர்களோ தங்கள் வீட்டில் இருக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை உடைப்பது போல வீடியோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இன்னும் ஒரு ரசிகரோ உச்சபட்சமாக அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட இலவச வீட்டை இடிப்பது போன்ற பரிதாபங்களும் நடந்து வருகின்றன.

சமூக நீதி திட்டங்களில் ஒன்றான இது போன்ற திட்டங்களைக் குறை கூறுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கமல் ஹாஸனும் இது போன்ற இலவச திட்டங்கள் பிச்சைக்காரர்களுக்குதான் வேண்டும் எனும் மோசமானக் கருத்தைத் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நேற்று யார் அந்த எழுவர் என ராஜிவ் கொலையில் சம்மந்தப்பட்டு சிறையில் இருப்பவர்களைப் பற்றி அப்பாவியாகக் கேட்கிறார்.

தமிழக அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாமலும், தமிழகத்தின் வரலாற்றில் 27 ஆண்டுகளாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் பிரதமரின் கொலை சம்மந்தப்பட்ட வழக்குப் பற்றிக் கூட தெரியாமல் இருப்பவர்களும் தமிழ்நாட்டை ஆள நினைப்பது மிகப் பெரிய அரசியல் நகைமுரண்.

இது போன்ற அரைகுறைக் கருத்துகளுக்கு அரசியல் விவகாரங்களில் அதிரடியான கருத்துகளைக் கூறி வரும் எழுத்தாளர் சாரு நிவேதிதா இவர்கள் மூன்று பேரையும் கடுமையாக விமர்சித்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அதில் ‘சினிமா நடிகனை வெறும் சினிமா நடிகனாக மட்டுமே பார்க்கும் நாள் எப்போது வருகிறதோ அப்போதுதான் தமிழ்நாடு உருப்படும். அதுவரை ரஜினி, விஜய் போன்ற கோமாளிகளாலும் கமல் போன்ற அரைவேக்காடுகளாலும் தமிழ்நாட்டுக்குக் கேடுதான்.’ என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.