Breaking News
அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதியின் உடல் அடக்கம்: லட்சக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அவர் ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று இறுதி சடங்குகள் நடந்தன. அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர்.

அவர்கள் அனைவரும் கறுப்பு நிற உடையில் வந்திருந்தனர். இதனால் டெஹ்ரான் நகரமே கறுப்பு நிறமாக மாறியது போல காட்சியளித்தது. மக்கள் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுலைமானி உடலுக்கு, ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி காமெனி தலைமையில் இறுதி சடங்குகள் நடந்தன. இதில் அதிபர் ஹசன் ருஹானி உள்பட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இறுதி சடங்கின் போது, அயதுல்லா அலி காமெனி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். அந்த காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கும்விதமாக அமைந்தது. சுலைமானியின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்நாட்டு ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் சுலைமானியின் உடல் பெரிய வாகனத்தில் வைக்கப்பட்டு, மக்கள் வெள்ளத்தில் மிதந்தவாறே கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவது தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈராக் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், “பல பில்லியன் டாலர் மதிப்பிலான விலை உயர்ந்த விமான தளங்களை கட்ட அமெரிக்கா அளித்த பணத்தை ஈராக் திரும்ப அளிக்கும்வரை அமெரிக்க படைகள் அந்த நாட்டிலிருந்து வெளியேறாது. எங்கள் படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் நாங்கள் அவர்கள் இதற்கு முன்னர் பார்த்திருந்த வகையில் பொருளாதார தடைகளை விதிப்போம்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.