
தூத்துக்குடி கடலில் மூழ்கி சங்கு எடுக்க அனுமதி வழங்க கூடாது – மீன்வளத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மன்னார் வளைகுடா பகுதி கடல்வாழ் உயிர்கோள காப்பகம் மற்றும் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி கடல் பகுதியில் ஆழ்கடலில் மூழ்கி சங்கு சேகரிக்க அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நாட்டுப் படகு மீன்பிடி தொழிலாளர்கள் நலச்சங்க செயலாளர் ஜான்சன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை 350 கி.மீ. தூர கடல் பரப்பில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவு மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக மத்திய அரசு 1989-ம் ஆண்டு அறிவித்தது. இப்பகுதியில் உள்ள வான் தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்கு சல்லி தீவு, முயல்தீவு உள்ளிட்ட 21 உள்ளடக்கிய பகுதியை பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய பூங்காவாக தமிழக அரசு அறிவித்தது. இங்கு 4.223 கடல்வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அழிந்து வரும் இனமான கடல் பசு மற்றும் 14 வகை கடல் புற்களும் அடங்கும். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் மூழ்கி சங்கு சேகரிக்கும் பணியை ஏராளமானோர் மேற்கொள்கின்றனர். இதற்கு மீன் வளத்துறை உரிமம் வழங்குகிறது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் சங்கு எடுக்க உரிமம் வழங்குவதால் அரிய கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்.
எனவே, மன்னார் வளைகுடாவில் கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் ஆழ்கடலில் சங்கு எடுக்க உரிமம் வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மன்னார் வளைகுடா பகுதி கடல்வாழ் உயிர்கோள காப்பகம் மற்றும் தேசிய பூங்காவாக அறிவிக்கப் பட்டு உள்ளது. அவற்றின் எல்லை இதுவரை வரையறை செய்யப்படவில்லை. எனவே, தூத்துக்குடி கடலில் மூழ்கி சங்கு சேகரிக்க மீன்வளத்துறை உரிமம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர்.