Breaking News
‘‘நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட திட்டமா?’’ ‘லஞ்சம்-ஊழலை ஒழிப்பேன்’ என்று படவிழாவில் பரபரப்பு பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்–கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசியதாவது:–

‘‘என் படங்களின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இசை வெளியீட்டு விழா நடத்தி அதில் கலந்து கொள்கிறேன். கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்தில் சாவித்திரி அம்மா மாதிரியான நடிகையை கண்முன் நிறுத்துவது சாதாரண வி‌ஷயம் இல்லை. அந்த கதாபாத்திரத்தை கீர்த்தி சுரேஷ் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால் ஒரு கூட்டம் வெற்றிபெறக் கூடாது என்று உழைக்கிறார்கள். உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தா, வாழ்க்கை ஜம்முன்னு இருக்குமாம். வந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள்.

தேர்தலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பார்கள். நாங்கள் சர்கார் அமைத்து தேர்தலில் நிற்கப் போகிறோம். நான் படத்தை சொன்னேன். பிடித்திருந்தால் படத்துக்கு ஓட்டுப்போடுங்கள். நிஜத்தில் முதல்-அமைச்சரானால் நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். உண்மையாகவே முதல்-அமைச்சராகி விட்டால் லஞ்சம் ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்வேன்.

லஞ்சம், ஊழல் வைரஸ் மாதிரி பரவி இருக்கிறது. அதனை ஒழிக்க முடியுமா? என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு நாம் பழகிவிட்டோம். ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் எல்லோரும் சரியாக இருப்பார்கள். பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கக்கூட காசு கொடுக்க வேண்டியுள்ளது.

ஒன்று மட்டும் உறுதி. தர்மம்தான் ஜெயிக்கும். நியாயம்தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் தாமதமாக ஜெயிக்கும். அடிபட்டு வருபவன் தலைவன் ஆவான். அப்போதுதான் உண்மையான சர்கார் நடக்கும்.’’

இவ்வாறு விஜய் பேசினார்.

விஜய்யின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பி உள்ளது. அவர் அரசியலுக்கு வர திட்டமிடுவதாக பேசப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.