Breaking News
நடிக்க தடை விதிக்க வேண்டும் : நடிகை ராணியுடன் சண்முகராஜன் மீண்டும் மோதல்

வில்லன் நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் கூறினார். போலீசிலும் புகார் அளித்தார். பிறகு சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் நடிகை ராணி மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ள சண்முகராஜன் பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘என் மீது நடிகை ராணி பொய்யான பாலியல் புகார் கூறியுள்ளார். படப்பிடிப்பில் ஒரு காட்சியில் ராணி நிஜமாகவே என்னை அடித்து விட்டார். அதை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. உடனே போலீசில் புகார் கொடுத்து விட்டார். போலீசார் சமரசம் செய்து அனுப்பிவிட்டனர்.

ஆனால் ராணியோ என் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். வீடு இருக்கும்போது நான் ஓட்டலில் தங்குகிறேன் என்று கூறியுள்ளார். வீடு கேளம்பாக்கத்தில் உள்ளது. காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்பதால் தயாரிப்பாளர் அறை எடுத்து கொடுத்துள்ளார். பாலியல் புகாரால் நானும், எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம்.

நான் 90 படங்களில் நடித்து இருக்கிறேன். கமல்ஹாசன் என்னை அறிமுகப்படுத்தினார். என் சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு அவதூறு வந்தது இல்லை. ராணி அபாண்டமாக பழி கூறி இருக்கிறார். எனவே நடிகர் சங்கம் இருவரையும் விசாரித்து என்மீது தவறு இருந்தால் நடிக்க தடை விதிக்கலாம். அவர் மீது தவறு இருந்தால் அவருக்கு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் மனு கொடுத்து இருக்கிறேன்.

நான் அடிதடி பிரச்சினைக்குத்தான் மன்னிப்பு கேட்டேன். பாலியல் புகாருக்கு மன்னிப்பு கேட்கவில்லை. பாலியல் சம்பவமே நடக்கவில்லை.’’

இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.